சிறையில் மரணமடைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி ஜூலை 29-ல் மதுரை வருகை
சென்னை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலேயே மரணம் அடைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வரும் 29-ந் தேதி மதுரைக்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட இருக்கிறது,
2018 ஜனவரி 1-ல் மகாராஷ்டிராவின் பீமா கோரேகானில் மிகப் பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறைக்கு காரணமே 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி தன்னார்வ அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளர்கள், இடதுசாரிகள் பேசியதுதான் என்பது தேசிய புலனாய்வு ஏஜென்சியின் குற்றச்சாட்டு.
இதனையடுத்து 83 வயது தமிழகப் பாதிரியார் ஸ்டேன் சுவாமி உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாதுகாப்பு சட்டங்கள் பாய்ந்தன.
உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தமக்கு ஜாமீன் கோரி ஸ்டேன் சுவாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. பின்னர் சிறையில் கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் ஸ்டேன் சுவாமி மரணம் அடைந்தார்.
பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வரும் 29-ந் தேதி மதுரைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
Recommended Video
மதுரை தூய மரியன்னை பேராலய வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டேன் சுவாமியின் அஸ்தி வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட உள்ளது என்று மனித உரிமைக் காப்பாளர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.