இன்னும் சில நாள்தான்.. உண்மை வெளியே வரும்.. பாத்திமா தந்தையிடம் போலீஸ் கமிஷனர் உறுதி
Recommended Video
சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்து பேசியுள்ளார், பாத்திமா தந்தை, அப்துல் லத்தீப்.
கேரள மாநிலத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் மகள் பாத்திமா லத்தீப், சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி பாத்திமா, தான் தங்கியிருந்த விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலைக்கு ஐஐடியில் பணியாற்றும் இணை பேராசிரியர், சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து இவ்வழக்கு குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. நேற்று சென்னை வந்த அப்துல் லத்தீப், டிஜிபி திரிபாதி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, பாத்திமா மரணத்திற்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
இந்த நிலையில், அப்துல் லத்தீப்பிடம் குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதையடுத்து, இன்று பிற்பகல், சென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனை சந்தித்து இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்தார்.

இதன்பிறகு நிருபர்களிடம் அப்துல் லத்தீப் கூறுகையில், எனது மனவருத்தத்தை போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்தேன். சாதாரண விஷயம் போல இந்தப் பிரச்சினையை பார்க்கக்கூடாது என்றும் கோரிக்கைவிடுத்தேன்.
இந்த விவகாரத்தில் சரியாக விசாரணை நடத்தி, அடுத்த சில நாட்களில் குற்றவாளியை கைது செய்து, உண்மை விவரத்தை உலகத்துக்கு வெளிக்கொண்டு வருவோம் என்று சென்னை போலீஸ் கமிஷனர் என்னிடம் உறுதி அளித்தார். எனக்கு அவர் மீது நம்பிக்கை உள்ளது. இவ்வாறு லதீப் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications