சென்னை மெட்ரோ சூப்பர் பிளான்! கோயம்பேடு - ஆவடி புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க ரூ.6,500 கோடி வரை கட்டுமானச் செலவு ஆகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தற்போது விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் 3.20 லட்சத்திற்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். புயல், மழை, வெள்ள காலங்களில், பேருந்து, புறநகர் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டாலும், மெட்ரோ ரயில் சேவை கைகொடுத்து வருகிறது.

சென்னை மெட்ரோவுக்கு வரவேற்பு
சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024 ஆம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில், கோயம்பேடு முதல் ஆவடி வரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) இந்த மாதம் நிறைவடையும் என கூறப்படுகிறது. மேலும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இந்த பாதையை பட்டாபிராம் வரை நீட்டிப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வையும் நடத்தி வருகிறது.
பட்டாபிராம் வரை
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 2023 செப்டம்பர் மாதம், இரண்டாம் கட்டமாக, கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான மெட்ரோ திட்டத்தின் (மாதவரம் - சோழிங்கநல்லூர்) ஒரு பகுதியாக நெட்வொர்க்கை நீட்டிப்பது குறித்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை (DPR) சமர்ப்பித்த பிறகு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், ஜூலை 2024 இல் ரைட்ஸ் (RITES) நிறுவனத்திடம் சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து ஒப்படைத்தது.
இந்த நிலையில் ஆவடி வரையிலான டிபிஆர் இறுதி கட்டத்தில் உள்ளதால், பட்டாபிராம் வரையிலான சாத்தியக்கூறுகளும் பரிந்துரைப்படி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பட்டாபிராமில் பீக் ஹவரில் பீக் டைரக்ஷன் (PHPD) போக்குவரத்து ஒரு மணி நேரத்திற்கு 12,000 பயணிகள் வரை பயணிப்பதாக தெரிகிறது. இதனால் சாத்தியமானால் ஒரு மாதத்தில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
ரூ.6500 கோடி
கோயம்பேடு முதல் ஆவடி வரையிலான தோராயமான சீரமைப்பு நீளம் 16.1 கிமீ. இது பட்டாபிராம் வரை நீட்டிக்கப்பட்டால் கிட்டத்தட்ட 20 கிமீ ஆக அதிகரிக்கும். இதற்கு 6,500 கோடி மதிப்பிலான கட்டுமானச் செலவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் நீளத்தில் சுமார் 15 உயர்த்தப்பட்ட நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன
மேலும் மெட்ரோ டிப்போ ஆவடியில் அல்லது பட்டாபிராமில் உள்ள வெளிவட்டச் சாலை (Outer Ring Road) அருகில் உள்ள காலி இடத்தில் கட்டப்படும். கோயம்பேடு - ஆவடி மெட்ரோ ரயில் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை ஜனவரி இறுதிக்குள் தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications