சிக்கன் பிரியாணியில் கோழி இறகு... பிரபல ஹோட்டலில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை..!
சென்னை: சென்னை வானகரத்தில் உள்ள பிரபல அசைவ உணவகம் ஒன்றில் சிக்கன் பிரியாணியில் கோழி இறகு இருந்தது வாடிக்கையாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மதுரையை ஆண்ட மன்னர் ஒருவரின் பெயரில் சென்னை வானகரம் அருகே அசைவ உணவகம் ஒன்று இயங்கி வருகிறது. பார்ப்பதற்கு நன்றாக உள் மற்றும் வெளி அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள அந்த ஹோட்டலில், உணவும் தரமானதாக தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் அங்கு உணவு சாப்பிட வருவது வழக்கம்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி நேற்று வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியில், சிக்கனுடன் இறகும் ஒட்டிக்கொண்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஹோட்டல் ஊழியரை அழைத்து கேட்டபோது அவர் முறையாக பதில் கூற மறுத்திருக்கிறார்.
இதையடுத்து இந்த விவகாரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. புகாரின் பேரில் அதிரடியாக அந்த பிரபல அசைவ ஹோட்டலுக்குள் நுழைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி, சமையலறைக்குள் ஆய்வு நடத்தினார். அப்போது உடலுக்கு கேடு விளைவிக்கும் சிவப்பு நிறமூட்டியை தடவி சிக்கன் பொறிக்கப்பட்டு கொண்டு இருந்தது கண்டறியப்பட்டது.
நிறமூட்டி உபயோகம் செய்யப்பட்ட சிக்கன்களையும், நிறமூட்டி டப்பாக்களையும் பறிமுதல் செய்த உணவு பாதுகாப்புத்துறையினர் அதனை குப்பையில் கொட்டினர். மேலும், உணவுப் பொருட்களை திறந்து வைக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டும் அதனை மீறி திறந்து வைத்திருப்பது தவறு என ஹோட்டல் நிர்வாகத்திடம் எச்சரிக்கப்பட்டது.
தற்போது எச்சரிக்கை நோட்டீஸ் மட்டும் கொடுத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி வெங்கடேசன், மீண்டும் ஆய்வுக்கு வரும் போது தவறு நடக்கும் பட்சத்தில் நடவடிக்கை மிக கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துச் சென்றுள்ளார்.