தைரியம் இருக்கா? மோடி பற்றிய பழைய ட்வீட்டால் வம்பிழுக்கும் காங்கிரஸ்.. நடிகை குஷ்பு சுளீர் பதிலடி!
சென்னை: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் மோடி குறித்து 5 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை குஷ்பு போட்ட ட்வீட் தற்போது விவாதத்தை கிளப்பி உள்ளது. இந்த ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் வேகமாக பரப்பி வருவதோடு, குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வியையும் எழுப்பி உள்ளனர். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சிக்கு குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதி எம்பியாக இருந்தார். இவர் கடந்த 2019ல் கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த பிரசாரத்தில் ‛மோடி' எனும் பெயரை திருடர்களுடன் ஒப்பிட்டு கேள்வி எழுப்பி இருந்தார்.
அதாவது லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோர் மோசடி செய்துவிட்டு வெளிநாடு சென்ற நிலையில் திருடர்களின் பெயர் எல்லாம் எப்படி மோடி என முடிகிறது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி இருந்தார். இது தான் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடியையும், ஓபிசி பிரிவினரையும் ராகுல் காந்தி இழிவுப்படுத்தியதாக பாஜகவினர் குற்றம்சாட்டினர்.

2 ஆண்டு சிறை தண்டனை
மேலும் இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான புர்னேஷ் மோடி இந்த வழக்கை தொடர்ந்தார். கடந்த 4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல் காந்தியை குற்றவாளி எனக்கூறிய நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. மேலும் மேல்முறையீடு செய்ய வசதியாக ஜாமீன் வழங்கியது.

ராகுல் தகுதி நீக்கம்
இந்த தண்டனை விவகாரம் ராகுல் காந்திக்கு பெரும் அதிர்ச்சியை வழங்கியது. மேலும் எம்பி, எம்எல்ஏவாக இருப்பவர்கள் குற்றம் மற்றும் அவதூறு வழக்குகளில் 2 அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை பெற்றால் அவர்களை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய முடியும். அதன்படி நேற்று முன்தினம் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை குஷ்புவின் ட்விட் விவாதம்
இது ஒருபுறம் இருக்க நடிகையும், பாஜக கட்சியை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய குழு உறுப்பினராக உள்ள குஷ்புவின் பழைய ட்விட்டர் பதிவு இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த நிலையில் தான் இந்த பதிவு பேசும்பொருளாகி உள்ளது. அதாவது கடந்த 2018ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு, மோடி எனும் பெயரை கடைசியாக கொண்ட லலித் , நீரவ், நமோ(நரேந்திர மோடி) உள்ளிட்டவர்கள் ஊழல்வாதிகள் என பொருள்படும்படி கூறியிருந்தார். இந்த ட்வீட்டை தான் தற்போது காங்கிரஸ் கட்சியினர் பலரும் பகிர்ந்து ராகுலை போல் குஷ்புவுக்கும் தண்டனை விதிக்கப்படுமா என கேள்வி எழுப்பி வருகின்றன.

தைரியம் இருந்தால் வழக்கு போடுங்கள்
இந்நிலையில் தான் குஷ்பு காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛
5 ஆண்டுக்கு முந்தைய பழைய ட்வீட்டை காங்கிரஸ் கட்சியினர் இப்போது எடுத்து கொண்டு தங்களை தற்காத்து கொள்ள முயற்சி செய்கின்றனர். அப்போது நான் காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக இருந்தேன். இதனால் தலைவரான ராகுல் காந்தியின் அதே மொழியை பயன்படுத்தினேன். ராகுல் காந்தியின் வழியை பின்பற்றினேன். ஊழலுக்கும், திருடனுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு தைரியம் இருந்தால் என்மீது வழக்கு போடுங்கள்.

எதுவும் மாறவில்லை
மேலும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். நான் எனது காட்சியின் செய்தி தொடர்பாளர் இல்லை. உங்களை காப்பாற்றி கொள்ள கொஞ்சம் ஹோம்வொர்க் செய்யுங்கள். எதுவும் மாறவில்லை. எதுவும் மாறப்போவதும் இல்லை. அவர்கள் படுதோல்வி அடைவதில் எந்த அதிசயமும் இல்லை.

வேலையின்றி இருப்பதால்
எனது ட்வீட்டை நான் நீக்கமாட்டேன். அது அப்படியே இருக்கிறது. இன்னும் பல உள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு வேலையின்றி இருப்பதால் இன்னும் கூட சிலவற்றை கண்டுபிடிக்கும் வகையில் நேரத்தை செலவிடலாம். என்னையும், ராகுல் காந்தியையும் காங்கிரஸ் எப்படி ஒன்றாக வைத்து பார்க்கிறது என்பதை அறிய விரும்புகிறேன். இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் என கூறிக்கொள்ளும் ராகுல் காந்திக்கு இணையான அந்தஸ்தை நான் சம்பாதித்து இருக்கிறேனா? என்ற உண்மையை அறிய நான் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு நன்றி'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications