கூட்டுறவு துறையில் 2257 பணியிடம்! நேரடி விண்ணப்பம் ஏன்? டவுட் வருதே.. தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
சென்னை: அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், அவர்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல், எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் என மொத்தம் 2,257 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி நாள் 1.12.2023 என்றும் கூட்டுறவு சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மாவட்ட வாரியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறைகள் தொடங்கியுள்ள நிலையில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 64 லட்சம் பேர் பதிவு செய்துவிட்டு வேலைக்கு காத்திருக்கும் நிலையில், நேரடி விண்ணப்பம் கோரப்படுவது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கி வரும் கூட்டுறவு சங்கங்களில் 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இன்றைய நாளிதழில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சுமார் 64 லட்சம் இளைஞர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றார்கள் என்ற செய்தி வெளிவந்திருக்கிறது. அவர்களில் இருந்து தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்காமல், எதற்காக கூட்டுறவுத் துறை பணியிடங்களுக்கு நேரடி விண்ணப்பம் கோரப்படுகிறது?
கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடந்து அவர்களின் கண்காணிப்பில் தான் பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும். ஆனால், கூட்டுறவு நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தாமல், அவசர அவசரமாக பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோருகின்றனர். அரசுப் பணியிடங்களை நிரப்ப லஞ்சம் வாங்கியதால் தான் திமுகவின் ஒரு அமைச்சரே சிறையில் இருக்கிறார். மீண்டும் அதுபோல மிகப் பெரிய அளவில் முறைகேடு நடத்த திமுக திட்டமிட்டுள்ளதோ? என்ற சந்தேகம் எழுகிறது.
லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்ற நிலையில், அவர்களைப் புறக்கணித்து, அரசுப் பணிகளை தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு வழங்க முயற்சிப்பதை, திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும். கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான இளைஞர்களுக்கு இந்த பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications