ஷூட்டிங்கில் டெல்லி கணேஷை கண்டாலே பயப்படுவாங்களாம்.. ஏன் தெரியுமா? அவரே சொன்ன பிளாஷ்பேக்
சென்னை: பழம்பெரும் நடிகர் டெல்லி கணேஷ் கலைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்தவர். காமெடி, வில்லன், குணச்சித்திர கேரக்டர் என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் தனது அசாத்திய நடிப்பு திறனால் கேரக்டராக மாறிவிடுவார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவால் மறைந்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், ஷூட்டிங்கில் தன்னை கண்டாலே பயப்படுவார்கள் என்று அவர் சொன்ன பழைய வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பிரபல நடிகர் டெல்லி கணேஷ் (வயது 80) நேற்று இரவு காலமானார். நாயகன், அபூர்வ சகோதரர்கள், சங்கமம், அவ்வை சண்முகி, பாபநாசம் உள்பட 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள டெல்லி கணேஷ் மறைவு திரையுலகினருக்கும் அவரது ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1979 -ஆம் ஆண்டு பசி திரைப்படத்திற்கு "தமிழ்நாடு மாநில அரசின் சிறந்த நடிகருக்கான விருதை டெல்லி கணேஷ் பெற்றார். அதோடு, 1993 - 1994ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதும் டெல்லி கணேஷ் பெற்றுள்ளார். 1977 ஆம் ஆண்டு பட்டினப்பிரவேசம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆன டெல்லி கணேஷ், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
அவ்வை சண்முகி, தெனாலி போன்ற படங்களில் டெல்லி கணேஷின் காமெடி ரோல் இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் அமைந்து இருக்கும். இதேபோல் அர்ஜுன் படத்தில் வடிவேலுவுடன் அவர் செய்யும் காமெடி காட்சிகளும் இன்னும் ரசிகர்களிடம் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்றே சொல்லலாம்.
இதேபோல் விஜய்யின் தமிழன் படத்தில் வக்கீலாக நடித்திருக்கும் டெல்லி கணேஷ் விஜய்யுடன் இணைந்து காமெடி காட்சிகளில் அசத்தி இருப்பார். குறிப்பாக சிகரெட்டை நிறுத்து என்று விஜய்யிடம் சொல்லும் காட்சிகள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் வகையில் இருக்கும். டெல்லி கணேஷ் மறைவுக்கு அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், டெல்லி கணேஷின் பழைய பேட்டி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தன்னைக் கண்டாலே பயப்படுவாங்க என டெல்லி கணேஷ் கூறியுள்ளார். டெல்லி கணேஷ் கூறுகையில், "எல்லா டைரக்டர்களுக்கும் புது நடிகர்களைத்தான் போட வேண்டும் என்று ஆசை. கேரளாவில் அப்படி கிடையாது. ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் அவர் கடைசி காலம் வரை வாய்ப்பு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள்.
தமிழகத்தில் தான், இரண்டு , மூன்று படத்திற்கு போடுவார்கள்.. அப்புறம் அவரை விட்டு விட்டு வேறு நடிகரிடம் போய் விடுவார்கள். அவரையும் அம்போ என விட்டுவிட்டு அடுத்தவரிடம் சென்று விடுவார்கள். இந்த இரண்டு படம் நடித்தவர்கள் எல்லாம் சான்ஸ் வரப்போகுது என காத்துக்கொண்டே இருப்பார்கள். ஒருத்தருக்கும் சான்ஸ் வராது.. ஏன் எங்களை வைத்து எடுத்தால் என்ன?
ஒரு இந்தி ஆர்டிஸ்ட்டோ, கனடா நடிகரோ பண்ணுவதை நான் பண்ணமாட்டேனா.. எனக்கு பண்ண தெரியாதா? ஆஸ்கர் அளவுக்கு படம் எடுத்தவர்களுடன் எங்களுக்கு நடிக்க தெரியும். நடிப்பு தெரியும்.. எந்த ரோல் கொடுத்தாலும் அந்த ரோலாக மாறி அர்ப்பணிப்புடன் நடிப்போம். 7 மணிக்கு கால் ஷீட் என்றால் 6.30 மணிக்கு மேக் அப் உடன் ரெடியாக இருப்பேன். ஒரு நாள் கூட லேட் ஆனது கூட கிடையாது. டெல்லி கணேஷ் என்றால் பயப்படுவாங்க எல்லாரும்.. அந்த ஆள் சீக்கிரம் வந்துடுவார்.. வேகமாக கேமரா வையுங்கள் என்று" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications