பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்.. இன்று மிக முக்கியமான நாள்.. நிறைவேற போகும் கனவு
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்தில் கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையிலான 26 கி.மீ. பாதையில், பூந்தமல்லி- வடபழனி இடையே 16 கிமீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி இன்று ஆய்வைத் தொடங்க இருக்கிறார். இன்று தொடங்கி 3 நாட்கள் ஆய்வு நடைபெற இருக்கிறது.
சென்னையில் 116 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரையிலான 26 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக பூந்தமல்லி- வடபழனி இடையே 16 கிமீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

சோதனை ஓட்டம்
இவ்வழித்தடத்தில் பூந்தமல்லி முதல் போரூர் வரை மெட்ரோ ரயில் சேவை 10 கிமீ தூரத்திற்கு தொடங்க ரயில்வே பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் போரூர்-வடபழனி இடையில் கடந்த மார்ச் மாதம் 11ம் தேதி வெற்றிகரமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சோதனை ஓட்டங்கள் முடிந்த நிலையில், பூந்தமல்லி-வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான அனைத்து நடவடிக்கையையும் மெட்ரோ ரயில் நிறுவனம் எடுத்துள்ளது.
இன்று காலை சோதனை ஓட்டம்
பூந்தமல்லி-வடபழனி இடையிலான 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி தலைமையிலான குழுவினர் இன்று சோதனைகளை தொடங்குகிறார்கள்.. பூந்தமல்லி, மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்குகிறது. அப்போது மெட்ரோ ரயில் பாதைகள், ரயில் நிலையங்கள், பிரேக்கிங் தொழில்நுட்பம், சிக்னல் தொழில்நுட்பம், பயணிகளின் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை ஆய்வு செய்ய உள்ளார்.
ஆய்வின் முக்கிய அம்சங்கள்
பிரேக்கிங் தொழில்நுட்பம்: ரயிலின் பிரேக் சிஸ்டம் அவசர காலங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பது சோதிக்கப்படும்.
தண்டவாள தரம்: அதிவேகமாக ரயில் செல்லும்போது தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் அதிர்வுகள் ஆய்வு செய்யப்படும்.
பயணிகள் பாதுகாப்பு: நடைமேடை கதவுகள், தீயணைப்பு வசதிகள் மற்றும் அவசரகால வெளியேற்ற வழிகள் உறுதி செய்யப்படும்.
கட்டுமான வசதி: ரயில் நிலையங்களின் தரம், மின்தூக்கிகள் (Lifts) மற்றும் படிக்கட்டுகளின் வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்படும்.
இன்று போரூர் வரை ஆய்வு
இன்று பூந்தமல்லி-போரூர் இடையிலான 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு மட்டும் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2ம் நாள் ஆய்வில் போரூர் வடபழனி இடையே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்துவாராம். 3ம் நாளில் தான் பூந்தமல்லி முதல் வடபழனி வரை மெட்ரோ ரயிலை 80 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை நடத்த உள்ளார். ஆய்வின் போது குறைபாடுகளை கண்டால் அவர் சரி செய்ய அறிவுறுத்துவார். அதன்பின்னர் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி ஸ்டாலின் இணைந்து தொடங்கி வைப்பார்கள்
ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஒப்புதல் அளித்த பின்னர், இந்த மாதமே வடபழனி பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் ஓடத்தொடங்கிவிடும். இந்த ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடியும், முதல்வர் ஸ்டாலினும் இணைந்து தொடங்கி வைக்கஅதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வடபழனி -பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் ஓடுவது உறுதியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications