நெருங்கும் லோக்சபா தேர்தல்! இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிவைப்பு.. இதுதான் காரணமாம்!
சென்னை: இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 22ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். ஜனவரி 5ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதவாக்கில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள மற்றும் பெயர்கள் நீக்க மற்றும் சேர்க்க சிறப்பு முகாம்கள் நடைபெற்று வந்தன.

வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தம் 6.11 கோடி வாக்காளர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதில், தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
திருத்தங்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 5ஆம் தேதி வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புயல் மழை வெள்ள பாதிப்புகளால் விண்ணப்ப பரிசீலனை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தள்ளிப்போகிறது.
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பீகார், உத்தரகான்ட், ஹரியானா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட், பஞ்சாப், டெல்லி ஆகிய 12 மாநிலங்களுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி ஜனவரி 5-ல் இருந்து ஜனவரி 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications