கண்டிப்பாக செய்வோம்.. வாக்கு தந்த முதல்வர்.. கடைசி நேரத்தில் அவசர ஏற்பாடு.. சொன்னபடியே நடந்த "லைவ்"
சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த முறை தமிழ்நாடு அரசு வாக்கு அளித்தபடியே இன்று லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
Recommended Video

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர். என் ரவி உரையுடன் நடைபெற்றது. ஆளுநராக பொறுப்பேற்ற பின் முதல்முறை ஆளுனர் ரவி சட்டசபையில் இன்று உரையாற்றினார்.
அரசை புகழும் வகையில், ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மேகதாது அணை எதிர்ப்பு குறித்தும், ஜிஎஸ்டி எதிர்ப்பு குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவியின் உரையில் இடம்பெற்று இருந்தது.

என்ன உறுதி
கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போதே அவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். திமுக அரசு கிட்டத்தட்ட 2011ல் இருந்து சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தது. ஆனால் முந்தைய அதிமுக அரசு இதில் பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை. இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் அவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

நேரடி ஒளிபரப்பு
ஆனால் கடந்த சட்டசபை கூட்டத்தொடர் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. கடந்த முறை கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றதால் இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதில் சிக்கல் இருந்தது. கொரோனா காலம் என்பதால் கலைவாணர் அரங்கில் கூட்டம் நடைபெற்றதால் இந்த ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை. ஆனால் அப்போதே இதை அதிமுக விமர்சனம் செய்தது. திமுக தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று விமர்சனம் வைத்தது.

அதிமுக விமர்சனம்
ஆட்சிக்கு வந்ததும் சட்டசபை நிகழ்வுகளை லைவ் ஒளிபரப்பு செய்வோம் என்று திமுக கூறியது. ஆனால் முதல்வர் இதை செய்யவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்போது அவையில் விமர்சனம் வைத்து இருந்தார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், அடுத்த கூட்டத்தொடரில் கண்டிப்பாக சட்டசபை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்புவோம். கடந்த 10 ஆண்டுகளாக சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை விடுத்து வந்தோம். இப்போது நாங்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவோம்.

ஏற்பாடு
ஜார்ஜ் கோட்டையில் கூட்டம் நடக்கும் போது கண்டிப்பாக அதை லைவ் ஒளிபரப்பு செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த கூட்டத்தொடரிலேயே அறிவித்து இருந்தார். இதற்காக ஜார்ஜ் கோட்டையில் கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்றது. இந்த முறை கூட்டத்தொடர் ஜார்ஜ் கோட்டையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டதால் அங்கு இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால் கடைசி நேரத்தில் ஓமிக்ரான் காரணமாக மீண்டும் கலைவாணர் அரங்கிற்கு கூட்டம் மாற்றப்பட்டது.

எதிர்பார்ப்பு
இதனால் இந்த முறையும் லைவ் ஒளிபரப்பு வாய்ப்பு இல்லை என்றே எதிர்பார்க்கப்பட்டது. கலைவாணர் அரங்கில் அவசர அவசரமாக கேமரா பொருத்தும் ஏற்பாடுகள் நடக்க வாய்ப்பு குறைவு என்பதால் இந்த முறையும் லைவ் ஒளிபரப்பு வாய்ப்பு இல்லை என்றே எதிர்பார்க்கப்பட்டது. திடீரென கூட்டம் கலைவாணர் அரங்கிற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் ஆச்சர்யப்படுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் இன்று லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த முறை தமிழ்நாடு அரசு வாக்கு அளித்தபடியே இன்று லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அவசர ஏற்பாடு
கடைசி நேரத்தில் அவசர அவசரமாக கேமரா பொருத்தும் பணிகள் நடைபெற்று லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. . https://youtu.be/PQrJ6Na21-I என்ற லிங்கில் இந்த முறை மொத்த அவை நிகழ்வு ஒளிபரப்பப்பட்டது. இதையடுத்து வரும் நாட்களிலும் இதேபோல் அவை நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று எதிர்பார்ப்படுகிறது. தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை இனி வரும் நாட்களில் மக்களும் வெளிப்படையாக பார்க்கும் வாய்ப்பு எழுந்துள்ளது.

லைவ் விவரம்
ஆனால் இந்த கூட்டத்தொடரில் அனைத்து நிகழ்வுகளும் மொத்தமாக லைவில் ஒளிபரப்பப்படாது. அவை கூட்டத்தொடர் ஓமிக்ரான் பரவலால் இன்னும் இரண்டு நாட்கள் கூட்டம் நடக்கும்.இரண்டு நாளில் ஆளுநர் உரை மீதான நன்றி உரை, கேள்வி நேரம் முதல்வர் பதில் மட்டுமே நடக்க உள்ளது. வேறு நிகழ்வுகள் இந்த இரண்டு நாட்களில் நடக்காது. இந்த நிகழ்வுகள் மட்டும் லைவில் ஒளிபரப்பப்படும். அடுத்த கூட்ட தொடரில் மொத்த தொடரும் முழுமையாக ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications