தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குகீழ் வெறும் 2.2% மட்டுமே! நிதி ஆயோக் ரிப்போர்ட்டுடன் பேசிய தங்கம்
சென்னை: தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என். ரவி உரையுடன் தொடங்கியது. அப்போது தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையில் ஆளுநர் ரவி முதல் பத்தியை மட்டும் படித்துவிட்டு அதனுடன் கூடுதலாக சிலவற்றை படித்து, முழு உரையையும் படிக்காமல் புறக்கணித்துவிட்டார்.

இதையடுத்து அந்த உரையை சபாநாயகர் அப்பாவு படித்தார். அவர் படித்து முடித்ததுடன் ஆளுநரை விமர்சனம் செய்யத் தொடங்கினார். இதையடுத்து நாட்டுப் பண் தொடங்குவதற்கு முன்பே ஆளுநர் சட்டசபையில் இருந்து வெளியேறினார். அரசு தயாரித்து கொடுத்த உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம் பெறும் வகையில் சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் முதல்வர் பதிலுரை ஆகியவை பிப்ரவரி 15ஆம் தேதி வரை நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பிப்ரவரி 13 ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றித் தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. 14 ஆம் தேதியும் விவாதம் தொடர்ந்த நிலையில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதில் உரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து சட்டசபை கூட்டம் மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது 2024- 2025 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தனது முதல் முழு பட்ஜெட்டை 7 அம்சங்களுடன் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
அவர் தனது உரையில் முதல்வர் ஸ்டாலினால் தமிழகத்திற்கே பெருமை. காலத்தால் நிலைத்து நிற்கும் திட்டங்களால்தான் தமிழகம் வெற்றி நடை போடுகிறது. கருணையும் நிதியும் ஒரு சேர சேரும் போதெல்லாம் தமிழகம் வளம் பெறுகிறது. பட்ஜெட்டை தயாரிக்க அண்ணாவின் சொல்லோவியம் உதவியது.
100 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் தமிழகத்தை தலைநிமிரச் செய்தன. 100 ஆண்டுகளுக்கு முன்பு 1924 ஆம் ஆண்டு நடந்த நிதிநிலை அறிக்கையில் மேட்டூர் அணை கட்டும் அறிவிப்பு வெளியானது.
1990 ஆம் ஆண்டு கருணாநிதி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அறிவித்திருந்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ 500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. குடிசைகளே இல்லாத வகையில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.
தமிழகத்தில் வறுமையை ஒழிக்க முதல்வரின் தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படும். சுமார் 5 லட்சம் பேரை கண்டறிந்து வறுமையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். நிதி ஆயோக் புள்ளிவிவரத்தின் படி தமிழகத்தில் 2.2 சதவீதம் பேர் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications