வண்ணாரப்பேட்டை கேஜிஎப் துணிக்கடையில் குழந்தை தொழிலாளர்கள்! இன்ஸ்டா ஸ்டார் விக்னேஷ் மீது வழக்கு பதிவு
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பணிக்கு அமர்த்திய புகாரில் கேஜிஎப் துணிக்கடையின் உரிமையாளர் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி. சாலையில் கேஜிஎப் துணிக்கடை நடத்தி வருகிறார் விக்கி என்கிற விக்னேஷ். இவரது கடையில் நிறைய யூடியூபர்கள் வீடியோ செய்துள்ளனர். அவர்களிடம் விக்னேஷ் காமெடியாகவும் நையாண்டித்தனமாகவும் பேசுவார்.

இதனால் இவரது கடை வீடியோக்களுக்கு ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். கடையில் உள்ள துணியை உட்காரும் நாற்காலி போல் எப்படி பயன்படுத்துவது என்ற வீடியோ வைரலானது. இன்ஸ்டாகிராமிலும் அவர் பேசும் வசனங்களை வைத்தே பலர் ரீல்ஸ் செய்துள்ளனர்.
இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது துணிக்கடை வண்ணாரப்பேட்டையில் உள்ள எம்.சி. சாலையில் மட்டுமல்லாமல் ஜீ.ஏ. சாலையிலும் இயங்கி வருகிறது. இந்த துணிக்கடையில் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதன்பேரில் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர்.

அதில் விக்கிக்கு சொந்தமான துணிக்கடை உள்ளிட்டவற்றில் வேலை பார்த்ததாக சிறுவர்களை அதிகாரிகள் மீட்டெடுத்தனர். அவர்கள் சிறுவர்கள் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளனர். கேஜிஎப் உரிமையாளர் விக்கியிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனராம். இந்த நிலையில் தீபாவளி நேரத்தில் வியாபாரம் அதிகம் இருப்பதால் பொறாமையில் சக துணிக்கடை உரிமையாளர்கள் வேண்டுமென்றே புகார் கொடுத்ததாக பலர் குற்றம்சாட்டியிருந்தனர்.
விக்கி சென்னை பாஜக கிழக்கு மாவட்டம் ராயபுரம் மத்திய பகுதி இளைஞரணி தலைவராக இருப்பதாக சொல்லப்படுகிறது. இவருக்கு சொந்தமான 3 கடைகளிலும் 10-க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்தி குறைந்த சம்பளத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக வேலை வாங்கியதாக தெரிகிறது. இதையடுத்து விக்கி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications