சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் பயங்கர தீவிபத்து.. திகுதிகுவென பற்றி எரிந்த துணிக் கடைகள்
சென்னை: சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
சென்னை சவுகார்பேட்டை மிண்ட் தெருவில் நிறைய துணிக் கடைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகின்றன. மற்ற கடைகளை காட்டிலும் இங்கு குறைந்த விலைக்கு துணிகள் விற்கப்படுகிறது. இதனால் ஏராளமானோர் தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு துணி வாங்குகிறார்கள்.
அது போல் கல்லூரி செல்வோர், வேலைக்கு செல்வோர் சுடிதார், புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள். இந்த பகுதி எப்போதும் மக்கள் நெரிசல் மிக்க பகுதியாகவே இருக்கும். எப்போது இரு சக்கர வாகனங்கள், சைக்கிள், ரிக்ஷா, மூன்று சக்கர சரக்கு வாகனங்கள் என சென்றுக் கொண்டிருக்கும்.
இந்த நிலையில் மிண்ட் தெருவில் உள்ள வணிக வளாகத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீயானது ஒரு கட்டடத்திலிருந்து வணிக வளாகத்தில் இருந்த அடுத்தடுத்த கடைகளில் தீ மளமளவென பரவியது.

உடனே இந்த தீவிபத்து தொடர்பாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த வண்ணாரப்பேட்டை எழும்பூர் உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
அவர்கள் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த பூக்கடை போலீஸார் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 11 கடைகளில் பல கடைகள் எரிந்து நாசமானதாக தெரிகிறது. இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications