சென்னை பீச் ரயில் நிலையத்தில் திடீரென பற்றி எரிந்த தீ.. பதறி ஓடிய பயணிகள்.. விபத்துகான காரணம் என்ன?
சென்னை: சென்னை பீச் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் உள்ள கடையில் திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளான சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் அங்கிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். உடனே வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் பூட்டியிருந்த கடையில் திடீரென தீ விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். மின் அழுத்தம் காரணமாக ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம்
சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். சென்னை மக்களின் போக்குவரத்து உயிர்நாடியாக புறநகர் ரயில் சேவை பார்க்கப்படுகிறது. இதில் முக்கியமாக சென்னை கடற்கரை டூ தாம்பரம் வழித்தடம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்களுக்கும் இங்கிருந்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலும் அதிகளவில் பயணிகள் வந்து செல்கிறார்கள். நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் இந்த ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
பிளாட்பாரத்தில் உள்ள கடையில் தீ விபத்து
சென்னை கடற்கரை ரயில் நிலைய பிளார்பாரத்தில் சில கடைகளும் இயங்கி வருகின்றன. இதில் பூட்டிக்கிடந்த ஒரு கடையில் இன்று மாலை திடீரென தீப்பிடித்தது. திடீரென தீப்பற்றி எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்த பயணிகள் பலரும் பதற்றமடைந்து சிதறி ஓடினர். பிளாட்பாரம் எண் 3-க்கும் 4-க்கும் இடையில் பயன்பாட்டில் இல்லாத ஒரு கடையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டது.
ஆரம்பத்தில் அந்த கடையில் இருந்து லேசாக கரும்புகை வெளியேறியது. தொடர்ந்து சிறிது நேரத்தில் தீ மளமளவென கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. உடனடியாக அங்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மேலும் தீ பரவாமல் இருக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆம் பிளாட்பாரத்தில் வந்து கொண்டிருந்த மின்சார ரயிலும் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் என்ன?
இதையடுத்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்க போராடினர். தீயணைப்பு வாகனத்தால் உள்ளே வர முடியாது என்பதால் வாகனத்தை வெளியில் நிறுத்தியப்படி தண்ணீர் குழாய் உள்ளே கொண்டு வரப்பட்டு தீயானது அணைக்கப்பட்டது. சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு தீ முழுமையாக அணைக்கப்பட்டது. நல்வாய்ப்பாக பெரிய அளவில் விபத்து ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து குறித்து சென்னை ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மின் அழுத்தம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ரயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு உண்டானது.












Click it and Unblock the Notifications