பகல் நேரத்தில் வெடி மருந்து கலவை பணிகளை செய்யக்கூடாது.. பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு!
சென்னை: பட்டாசு மூலப் பொருட்கள் கலவை செய்யும் பணியை காலை 6 - 10 மணிக்குள்ளாக முடிக்க ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலைகளில் நடக்கும் வெடி விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கையாக ஒன்றிய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. தொழிலாளர்கள் கவனமுடன் செயல்படவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் கொளுத்தி வருகிறது. கத்தரி வெயில் காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை இப்போதே சதம் அடித்து வருகிறது. போகப்போக, வெயில் இன்னும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், கோடை வெயில் அதிகரித்துள்ளதால் விருதுநகர், சாத்தூர், சிவகாசி பகுதிகளில் பட்டாசு தயாரிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டாசுக்கான ரசாயன மருந்து கலவை பணியினை காலை நேரங்களில் முடிக்கவும், மிகவும் அபாயகரமான ரசாயன கலவை பணிகளை காலை 6 மணிக்கு தொடங்கி காலை 10 மணிக்குள் முடித்திடவும் மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் பட்டாசு ஆலை நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
பட்டாசு செய்யும் இடங்களில் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்த கூடாது. பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விவரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைக்க வேண்டும். இதனை மீறினால் பட்டாசு தயாரிப்பு கூடத்திற்கான உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும். மேலும் பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடி விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் கடந்த 19 ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. நேற்று தேனி மாவட்டம் கம்பத்தில் பட்டாசு ஆலை விபத்தில் இருவர் உடல் சிதறி பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications