லைஃப் போட் ரெடி.. அவசர அவசரமாக சென்னை விரைந்த 4 மாவட்ட ‘ஸ்பெஷலிஸ்ட்' தீயணைப்பு வீரர்கள்!
சென்னை: தலைநகர் சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு விரைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 16 ஆம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக waaLai தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் சென்னையில் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை தீயணைப்பு மண்டலத்தில் இருந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மழைக் காலங்களில் தேவைப்படும் உபகரணங்களான லைஃப் ஜாக்கெட், லைஃப் போட், மரக்கிளைகளை வெட்டி அகற்றும் கருவிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கொண்டு சென்றுள்ளனர்.
சென்னைக்கு அனுப்பி வைப்பதற்காக ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் நன்கு பயிற்சி பெற்ற வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவில் ஸ்கூபா டைவிங் பயிற்சி பெற்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்த தீயணைப்பு வீரர் குழுவினர் நெல்லையில் இருந்து இன்று புறப்பட்டுச் சென்ற நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு மழை பாதிப்பு முடியும் வரை அங்கிருந்து பணி செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications