ஊட்டிக்கே போட்டி.. கருணாநிதி பிறந்தநாளை கலர் ஃபுல்லாக்க சென்னை வரலாற்றில் முதல் மலர் கண்காட்சி
சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதியின் பிறந்தநாளான இன்று சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கி உள்ளது.
ஜூன் 3 ஆம் தேதியான இன்று முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பிலும், அரசு சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

அரசு விழா
கடந்த மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்தார். போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்றவர் கலைஞர் எனப் புகழாரம் சூட்டிய அவர், தமிழ்நாட்டிற்காக கருணாநிதி கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டார்.

கருணாநிதி சிலை
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அரசு சார்பில் அமைக்கப்பட்ட அவரது கம்பீரமான சிலையை கடந்த 28 ஆம் தேதி இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு திறந்து வைத்தார். இந்த நிலையில் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

சென்னையில் முதல்முறையாக மலர் கண்காட்சி
இதனை தொடர்ந்து சென்னை வாலாஜா சாலையில் அமைந்துள்ள கலைவாணர் அரங்கத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். ஜூன் 5 ஆம் தேதி வரை 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிதான் சென்னை வரலாற்றில் நடைபெறும் முதல் மலர் கண்காட்சி என்று கூறப்படுகிறது.

மலர் சிற்பங்கள்
இந்த கண்காட்சியில் பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை, புனே, ஏற்காடு, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டு வரப்பட்டு காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

பொதுமக்கள் பார்வையிடலாம்
காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த மலர் கண்காட்சியை இரவு 8 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அரசு அறிவித்துள்ளது. மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.50-ம், மாணவர்களுக்கு ரூ.20-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. ஊட்டி, ஏற்காடு சென்று மலர் கண்காட்சியை காண முடியாதவர்கள் சென்னையிலேயே இதை கண்டுகளிக்கலாம்.












Click it and Unblock the Notifications