முதலில் திருச்சி பிறகு திருவள்ளூர்.. தமிழகத்திற்கு மறக்க முடியாத அக்டோபர் 11
சென்னை: 2024 அக்டோபர் 11 ஆம் தேதி, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகவே நினைவு கூறப்படும். இன்று மாலை வரை மாநிலம் முழுவதும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கான கொண்டாட்டங்களே தென்பட்டன. ஆனால், மாலை திருச்சியில் முதல் சம்பவம் நடைபெற்றது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் திருவள்ளூர் பொன்னேரி அருகே நடைபெற்ற ரயில் விபத்து சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜா செல்லும் ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானம், 141 பயணிகளுடன் மாலை 5.40 மணியளவில் புறப்பட்டு சென்றது. விமானம் டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களிலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. ஹைட்ராலிக் பிரச்னையால் சக்கரம் உள்ளே செல்லவில்லை என்று தகவல் வெளியானது.

இதனால் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்க முடிவு செய்தனர். ஆனால் தொழில்நுட்ப கோளாறால் அது உடனடியாக சாத்தியமாகவில்லை. புதுக்கோட்டை நார்த்தமலை சுற்றுவட்டாரங்களில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக விமானம் வானத்தில் வட்டமடித்தது. இதன் காரணமாக பதற்றம் தொற்றி கொண்டது.
எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்யப்பட்டன. திருச்சி விமான நிலையம் உச்சகட்ட பாதுகாப்பில் இருந்தது. விமானம் பத்திரமாக தரையிறங்கி விட வேண்டும் என்று நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தார்கள். அதிர்ஷ்வசமாக எந்த பிரச்னையும் இல்லாமல் விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
அதற்கான நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த துயரமான சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சென்னை, திருவள்ளூர், கவரப்பேட்டை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மைசூர் - தர்பங்கா (12578) எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. லோகோ பைலட் சிக்னல் வழங்கிய பிறகே கிளம்பியதாக கூறப்படுகிறது. எனவே தவறான சிக்னல் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் மற்றும் சரக்கு ரயில் சில பெட்டிகள் தடம்புரண்டு, பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தால் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. அரக்கோணம் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். கும்மிடிப்பூண்டி, பொன்னேரி பகுதிகளில் இருந்து ஏராளமான ஆம்புலஸ்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
ரயில்வே அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன. காவல்துறை, தீயணைப்புத்துறை, மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த விபத்து காரணமாக , அந்த வழித்தடங்களில் பல ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போதுவரை உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் மீட்புப் பணிகள் முடிந்த பிறகே முழு விபரம் வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications