மீன் விற்பனைக்கு தடை..ஆனால் அதை விற்றால்தான் அத்தியாவசிய பொருட்களைகூட வாங்கமுடியும்..மீனவர்கள் வேதனை
சென்னை: ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களை விற்பனை செய்தால் தான் அத்தியாவசிய பொருட்களைக்கூட தங்களால் வாங்க முடியும் என்ற நிலையில் இருப்பதால் தமிழக அரசு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் பெரும்பாலானவர்கள் நேரடியாக மீன் சார்ந்த தொழில்களையும், மற்றவர்கள் கடற்கரையில் சிறு கடைகள், ஆட்டோ ஓட்டுதல், தூய்மை பணிகள் உள்ளிட்ட தொழில்களையும் செய்து வருகின்றனர்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளால் பல்வேறு தொழில்களைப் போலவே இங்கு மீன் பிடி தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டமின்றி நொச்சிக்குப்பம்
சென்னையில் மீன் விற்பனைக்குப் பெயர் போன இடங்களில் ஒன்றான நொச்சிக்குப்பம். வார இறுதியில் மட்டுமின்றி வார நாட்களிலும்கூட மீன்களை வாங்க, பொதுமக்கள் இங்கு அலைமோதுவது வழக்கம். ஆனால் இப்போது மீன் மார்க்கெட்டில், ஓரிரு காகங்கள் மட்டும் இரை தேடிப் பறந்து கொண்டிருக்கின்றன .

மீனவர்கள்
தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கும் ஆண்கள் கரையில் நிற்கும் படகில் அமர்ந்து கடலை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதிகாலை முதல் மதியம் வரை மீன் வியாபாரம் செய்யும் பெண்கள் இப்போது, ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டு பொழுதைக் கழிக்கின்றனர். கடலை மட்டுமே தாங்கள் நம்பியிருப்பதாகவும் தினமும் கடலுக்குச் சென்றால் தான் தங்களால் பிழைப்பை நடத்த முடியும் என்றும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்
மளிகைக் கடைகள், காய்கறி கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் மதியம் 12 மணி வரை செயல்படத் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல மீன் விற்பனை செய்யும் இடத்திலும் தேவையான சமூக இடைவெளி, பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி விற்னை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்பதை மீனவர்களின் வேண்டுகோளாக உள்ளது. அத்தியாவசிய பொருளாக விவசாய பொருட்களைச் சேர்த்தது போல மீன்களையும் சேர்க்க வேண்டும் என்பதே மீனவர்களின் கோரிக்கை.

மீனவர்கள் கோரிக்கை
இது குறித்து அங்குள்ள மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன் பிடி தடை காலம் வரும். ஆனால், கடந்த ஓராண்டுக் காலமாகவே எங்கள் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு என அரசும் நிதி வழங்குகிறது. இருப்பினும் எங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் எங்களது நிலையை அறிந்து செயல்படுவார் என நம்புகிறோம்" என்றார்.

மீன் விற்பனையாளர்கள்
இதனால் மீனவர்கள் மட்டமின்றி, அதை நம்பியுள்ள மீன் வியாபாரிகள் உள்ளிட்ட பலரும்கூட பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மீன் விற்பனை செய்யும் பெண் ஒருவர் கூறுகையில், அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே தமிழக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களால் மீன் வியாபாரம் செய்தால் தான் அத்தியாவசிய பொருட்களையே வாங்க முடியும். எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

கூடுதல் நிவாரணம்
மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணத்துடன், ஊரடங்கு தடைக் காலத்தையும் கருத்தில் கொண்டு கூடுதல் நிவாரண நிதி அளிக்கத் தமிழ அரசு முன்வர வேண்டும் என்பதே மீனவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications