8 மாதங்களுக்கு முன் கருணாநிதி குடும்பத்தை மொத்தமாக கூடி மகிழ வைத்த முரசொலி செல்வம் வீட்டு நிகழ்ச்சி!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் 8 மாதங்களுக்கு முன்னர் தமது பேத்தி ஓவியாவின் வளைகாப்பு நிகழ்ச்சியை கோபாலபுரம் இல்லத்தில் நடத்தி ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பத்தினரையும் கூடி மகிழ்வித்த தருணங்களை திமுக சீனியர்கள் நெகிழ்ச்சியுடன் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மு.க. முத்து, மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி என 6 குழந்தைகள். இவர்களில் செல்வியை தமது சகோதரிகளில் ஒருவரான சண்முகசுந்தரம் அம்மாள் மகன் செல்வத்துக்கு திருமணம் செய்து வைத்தார். (முரசொலி செல்வத்தின் தாய் மாமா கருணாநிதி; முரசொலி மாறனின் சகோதர் முரசொலி செல்வம்; தயாநிதி, கலாநிதி மாறனின் சித்தப்பா; உதயநிதி ஸ்டாலினின் அத்தை கணவர் முரசொலி செல்வம்).

முரசொலி செல்வம்- செல்வி தம்பதியினருக்கு எழிலரசி என்ற மகள். எழிலரசி- ஜோதிமணி தம்பதியினருக்கு ஓவியா, காருண்யா என இரு மகள்கள். இவர்களில் ஓவியாவுக்கும் சந்தீப் ரெட்டிக்கும் 2021-ல் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில்தான் மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் மு.க.ஸ்டாலின், அழகிரி இணைந்து பங்கேற்றனர்.
ஓவியாவின் வளைகாப்பு அதாவது முரசொலி செல்வத்தின் பேத்தியின் வளைகாப்பு கடந்த பிப்ரவரி மாதம் சென்னை கோபாலபுரம் இல்லத்தில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அழகிரி என ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் பங்கேற்று மகிழ்ந்தது. கருணாநிதி குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒன்று கூடி மகிழ்ந்த நாளை ஒவ்வொரு முறையும் தங்களுடைய உரையாடலில் பகிர்ந்து கொள்வதும் வழக்கமாம்.
தற்போது பேத்தியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைவரையும் ஒன்று கூட்டிப் பார்த்துவிட்டு நிம்மதியாக கண்ணை மூடிக் கொண்டார் முரசொலி செல்வம் என நெகிழ்கின்றனர் திமுகவின் மேலிடத்துக்கு நெருக்கமான சீனியர்கள்.












Click it and Unblock the Notifications