ஜெயில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவை முதல்வராக்கிய பாத்திமா பீவி.. அதிரடியாக ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்!
சென்னை: தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி கேரளாவில் இன்று வயது முதுமை காரணமாக காலமானார். தமிழ்நாட்டில் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி மத்திய அரசால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர் பாத்திமா பீவி.
தமிழ்நாட்டில் 1996-2001-ல் திமுக ஆட்சிக் காலம நடைபெற்றது. அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் வேண்டுகோள் மத்திய அரசு, பாத்திமா பீவியை தமிழ்நாடு ஆளுநராக நியமித்தது. நாட்டின் உச்சநீதிமன்றத்தின் முதலாவது பெண் நீதிபதி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் என பெருமிதங்களுடன் தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி ஏற்றார் பாத்திமா பீவி.

கருணாநிதியுடன் மோதல்: தமிழ்நாட்டில் முதவ்லராக இருந்த கருணாநிதியின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் பல்வேறு பிரச்சனைகளில் முரண்பாடுகள் வெடித்தன. இதனால் முதல்வர்- ஆளுநர் இடையே மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து 2001 சட்டசபை தேர்தல் நடைபெற்றது.
தகுதி இழந்த ஜெயலலிதா: அத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியவில்லை. டான்சி வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை பெற்றார் ஜெயலலிதா. இதனால் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட முடியாத நிலை இருந்தது. ஆனால் புவனகிரி, கிருஷ்ணகிரி, ஆண்டிபட்டி, புதுக்கோட்டை ஆகிய 4 தொகுதிகளில் ஜெயலலிதா வேட்பு மனு தாக்கல் செய்தார். ஊழல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற காரணத்தால், தேர்தலில் போட்டியிட தகுதியில்லை என்று கூறி அவரது வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிகள் தள்ளுபடி செய்தனர். அந்த தேர்தலில் அதிமுகதான் அமோக வெற்றியஇப் பெற்றது.
பதவி பிரமாணம் செய்து வைத்த பாத்திமா பீவி: அப்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி தேர்தலிலேயே போட்டியிட முடியாத ஜெயலலிதாவை சட்டசபை குழு தலைவராக அதாவது முதல்வராக தேர்ந்தெடுத்தனர். இதனை எடுத்த எடுப்பிலேயே நிராகரித்திருக்க வேண்டிய ஆளுநர் பாத்திமா பீவி, ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற, தேர்தலிலேயே போட்டியிட தகுதியில்லாத நிலையில் இருந்த வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த ஜெயலலிதாவுக்கு முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். இது மிகக் கடுமையான எதிர்ப்பை உருவாக்கியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி, " ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படாதவருக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது சட்டப்படி குற்றம் எனவும், எனவே ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்" என வலியுறுத்தி இருந்தார். ஆனால் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் இதனை நிராகரித்துவிட்டார்.
உச்சநீதிமன்றம் குட்டு: இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவி பிரமாணம் செய்து வைத்ததை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி முதல்வராக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லாது என அதிரடி தீர்ப்பளித்தது. இதனால் முதல்வர் பதவியில் இருந்து ஜெயலலிதா விலகினார். அந்த தருணத்தில் தற்காலிக முதல்வராக பதவி வகித்தவர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது மிக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார் பாத்திமா பீவி.












Click it and Unblock the Notifications