விடிய விடிய இடி மழை.. வானில் வட்டமடித்து திருப்பி விடப்பட்ட விமானங்கள்.. சென்னை பயணிகள் கடும் அவதி!
சென்னை: சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த 3 விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் 8 விமானங்கள் தாமதமானதால் பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல் பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. சேப்பாக்கம், மயிலாப்பூர், கிண்டி, வேளச்சேரி, அண்ணா நகர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்தது.

மேலும், கோடம்பாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, அண்ணாசாலை, சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுத்தாங்கல் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்தது. அதிகாலையிலும் சென்னை நகரின் பல இடங்களில் லேசான மழை பெய்தது.
நள்ளிரவு முதல் தொடர்ந்து விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில், மழைநீர் தேங்கியுள்ளதால் வாக ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மிதமான மழை பதிவானது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர், அமைந்தகரை, மதுராந்தகம், மயிலாப்பூர், ஆலந்தூர், திருக்கழுகுன்றம், அயனாவரம், செங்கல்பட்டு, மாம்பலம், பொன்னேரி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் சிறிது நேரம் வட்டமடித்து பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று இரவு 11:35 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. அந்த நேரத்தில் பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்து கொண்டிருந்ததால், விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
ஜெர்மனி நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பெங்களூர் திரும்பிச் சென்றது.
அதேபோல் இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது. மொத்தமாக 3 விமானங்கள் பெங்களூக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும் பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் உள்ளிட்ட 8 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு தாமதமாக தரையிறங்கின. இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications