முழு ஊரடங்கு எதிரொலி.. சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான சேவைகள் ரத்து
சென்னை: சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடிக்கு செல்லும் விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை மறுநாள் ஜூன் 24-ந் தேதி அதிகாலை (23-ந் தேதி நள்ளிரவு) முதல் ஜூன் 30-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி, பரவை பஞ்சாயத்து, மதுரை கிழக்கு , மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் வட்டத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது.
மதுரையில் வரும் 28-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று எந்த ஒரு கடைகள் எதுவும் திறக்காமல் முழு அளவிலான தீவிரமான லாக்டவுன் கடைபிடிக்கப்பட இருக்கிறது. அன்று பொதுமக்கள் வெளியில் நடமாடவும் கூடாது.
கொரோனா தீவிரம் எதிரொலி- மதுரையில் ஜூன் 24 முதல் ஜூன் 30 வரை மீண்டும் முழு லாக்டவுன்
சென்னை முழு ஊரடங்கு
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா அதி உச்சமாக பரவுவதால் 12 நாட்கள் முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் இம்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
பிற மாவட்டங்கள்
இதனையடுத்து பிற மாவட்டங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்தது. குறிப்பாக மதுரை, திருவண்ணாமலை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்கலில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்தது.
நாளை முதல் ரத்து
இந்த நிலையில்தான், சென்னையில் இருந்து மதுரைக்கு செல்லும் 4 விமானங்களின் சேவை நாளை முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதிவரை விமான சேவைகள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஊரடங்கு
தூத்துக்குடியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியான நிலையில், விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தூத்துக்குடியில் பொது முடக்கம் அமலாகும் வாய்ப்பு உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.