சென்னையில் வெள்ளம்.. நேரில் ஆய்வு செய்ய சென்னை வருகிறார் ராஜ்நாத் சிங்.. முதல்வரையும் சந்திக்கிறார்
சென்னை: சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். மழை பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்யும் ராஜ்நாத் சிங் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினையும் சந்திக்கிறார்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்றுவிட்டாலும், புயலின் தாக்கம் இன்னமும் சென்னையை விட்டு அகலவில்லை. சென்னையில் பல்வேறு இடங்களில், சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து பக்கமும் மழைநீர் சூழ்ந்துள்ளது. புயல் சென்னையை கடந்து செல்லும்போது இருந்ததைவிட தற்போது குறைந்திருந்தாலும், இன்னமும் முழுதாக தண்ணீர் வடிந்துவிடவில்லை.

இதனால் வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை தமிழக அரசு செய்து வருகிறது. இதேபோல் சென்னையில் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் முதல்வர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று காலையில் தென்சென்னை பகுதியில் வடசென்னை பகுதியில் முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடர்ந்து கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, போர்வை உள்ளிட்ட நிவாரண பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை சென்னை வருகிறார். ஹெலிகாப்டரில் அவர் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு முதல்வர் ஸ்டாலினை அவர் சந்திக்கிறார்.












Click it and Unblock the Notifications