யானை பசிக்கு சோளப்பொறியா? தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பலனில்லை.. அதிமுக ஜெயக்குமார் கொந்தளிப்பு
சென்னை: யானை பசிக்கு சோளப்பொறி போல மழை வெள்ளத்துக்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது என்றும், தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் இல்லை என்றும் சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல், மழை வெள்ளத்தால் சென்னை உள்பட வட மாவட்டங்கள் கடும் பேரிழப்பை சந்தித்தது. இதேபோல் தென் மாவட்டங்களில் பெய்த பேய் மழையால், நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. இதற்கு மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று திமுக குற்றம்சாட்டிய நிலையில் தற்போது மத்திய அரசு ரூ.285 கோடி நிவாரணம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். யானை பசிக்கு சோளப்பொறி போல மழை வெள்ளத்துக்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளது. தேசிய கட்சிகளால் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் இல்லை என்று அவர் கூறினார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில், சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது:-
வர்தா புயல், சென்னையை தாக்கிய மிக்ஜாம் புயல் என பல்வேறு புயல்கள் சென்னையை தாக்கியிருக்கும் நிலையில், நாம் மத்திய அரசிடம் கேட்ட ஒன்றரை லட்சம் கோடி. ஆனால் யானை பசிக்கு சோள பொறி போல இதுவரையில் 7,000 கோடி தான் மத்திய அரசு கொடுத்துள்ளது. மத்திய ஆளுகின்ற தேசிய கட்சிகள் குறிப்பாக காங்கிரசாக இருந்தாலும், பாஜகவாக இருந்தாலும் இது தான் நிலை.
பாஜக மத்தியில் 10 வருடமாக ஆட்சியில் இருக்கிறது. வட மாநிலங்களில் வெள்ளம், புயல் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அங்கு உடனடியாக நிவாரணங்களை வாரி வழங்குகிறது. ஏன் தமிழ்நாட்டு மக்கள் வரி தரவில்லையா?.. தமிழ்நாட்டு மக்களும் தான் வரி தருகிறார்கள் தானே. நாங்கள் கொடுக்கிற வரிப்பணத்தில் சரிசமமாக தர வேண்டியது தானே?..
ஆனால் இதை விட்டுவிட்டு வடக்கிற்கு ஒரு நீதி.. தெற்கிற்கு ஒரு நீதி என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?... இதனால் தான் பொதுச்செயலாளர் தெளிவாக சொன்னார். தேசிய கட்சிகளால் ஒரு பிரயோஜனமும் கிடையாது. கிட்டத்தட்ட 17 வருஷமாக மத்தியில் இருக்கும் திமுக நினைத்திருந்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை திருத்துவதற்கு முயற்சி செய்திருக்கலாம்.
தென் மாநிலங்களுக்கு நிதி வழங்க மத்திய அரசு தயங்குகிறது. குறிப்பாக தமிழகத்தை ஓரவஞ்சனையோடு பார்க்கிறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் திமுக நினைத்திருந்தால், நிதி பகிர்வு சீராக இருப்பதற்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை கொண்டுவந்திருக்கலாம். இதை அப்பவே திமுகவினர் செய்திருந்தால் இப்போது யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பது படி தமிழகத்தில் நிவாரணம் வந்திருக்கும்.
ஆனால் திமுக அதனை செய்யவில்லையே. இப்படி எதுவுமே செய்யாமல் தமிழ்நாட்டு உரிமையை காப்போம்.. இந்தியாவை காப்போம் என்று ஸ்டாலின் பேசுவது வேடிக்கையாக உள்ளது. கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்று சொல்வதை போல தான் உள்ளது. இங்கே தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின், இன்று வடமாநிலத்தில் போய் பிரசாரம் செய்ய போகிறாராம். கேலிக்கூத்தான விஷயம் இது.
17 வருஷமாக இருந்துவிட்டு, நிதி தன்னாட்சியை பேணி காப்பதற்கு முடியாமல் திமுக இருக்கிறது. அன்றே இதை செய்திருக்கலாம். அன்று தவறவிட்டுவிட்டார்கள்.இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.












Click it and Unblock the Notifications