டெல்லியில் ரெடியான "விருந்து".. இங்கிருந்து பறக்கும் பார்சல்! ரூட்டை மாற்றும் திமுக? பச் தர்மசங்கடம்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்தான் டெல்லியில் கொடுக்கப்பட உள்ள விருந்து ஒன்று அரசியல் வட்டாரத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
குடியரசுத் தலைவராக உள்ள ராம் நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதி முடியும் நிலையில், இந்த வருடம் ஜூலை மாதம் 18ம் தேதி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
ஜூலை 21ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்த முறை பாஜக கூட்டணிக்கு எம்பி, எம்எல்ஏ எல்லாம் சேர்த்து 5.42 லட்சம் வாக்குகள் உள்ளன. எதிர்க்கட்சிகளின் திமுக, காங்கிரஸ் எல்லாம் சேர்த்து 4.49 லட்சம் வாக்குகள் கொண்டு உள்ளன.
சனாதன தர்மம் குறித்து பேசுவதா? வகிக்கும் பதவிக்கு இது அழகல்ல! ஆளுநர் ரவிக்கு திமுக கண்டனம்!
வாக்குகள் எத்தனை
இந்த தேர்தலில் மொத்தம் 10.82 லட்சம் வாக்குகள் உள்ளன. ஒரு எம்பிக்கு 700 வாக்குகள் உள்ளன. இந்த தேர்தலில் 51 சதவிகித வாக்குகள், அல்லது அதற்கு கூடுதலாக வாக்குகள் பெறும் நபர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது கிட்டத்தட்ட 5.55 லட்சம் வாக்குகள் பெற வேண்டும். இந்த நிலையில் பாஜக சில சிறிய கட்சிகள், கூட்டணியில் இல்ல சில கட்சிகளின் உதவியுடன் குடியரசுத் தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறது.
வெங்கையா நாயுடு
ஆனால் சமீப நாட்களாக வெளியாகும் செய்திகள் இதை மறுக்கின்றன. அதாவது வெங்கையா நாயுடுவுக்கு பாஜக வாய்ப்பு அளிக்க சான்ஸ் குறைவு என்று செய்திகள் வருகின்றன. இதற்கு இடையில்தான் அவர் டெல்லியில் உள்ள துணை குடியரசுத் தலைவர் இல்லத்தில் தமிழ்நாடு எம்பிகளுக்கு சிறப்பு விருந்து வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் பதவிக்காலம் முடிவை அடுத்து தனக்கு நெருக்கமான பல்வேறு மாநில எம்பிகளுக்கு விருந்து வைக்கிறாராம்.
விருந்து
அதன் ஒரு கட்டமாக திமுக எம்பிக்கள் உட்பட தமிழ்நாடு எம்பிக்கள் எல்லோருக்கும் விருந்து வைக்கிறாராம். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஸ்பெஷல் உணவுகளை, அங்கேயே தயாரித்தும். சில உணவுகளை ஸ்பெஷலாக இங்கே இருந்து பார்சல் அனுப்பியும் இவர்களுக்கு விருந்து வைக்க இருக்கிறாராம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குடியரசுத் தலைவர் தேர்தலில் இவர் களமிறங்கும் பட்சத்தில், தமிழ்நாடு எம்பிக்கள் ஆதரவு வேண்டி இப்படி செய்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மரியாதையை நிமித்தமா?
ஏற்கனவே இவர் தமிழ்நாடு எம்பிக்களுக்கு இவர் நெருக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்று செய்திகள் வருவதால், வெறுமனே மரியாதையை நிமித்தமாக இந்த விருந்து கொடுக்கப்படுகிறதா என்றும் கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் திமுகவிற்கு இதில் இன்னொரு தர்மசங்கடமான சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திமுகவை குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்க அழைத்துள்ளார்.
டெல்லி கூட்டம்
15ம் தேதி டெல்லியில் இந்த கூட்டம் நடக்கிறது. சோனியா காந்தியும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அப்படி இருக்கையில் இப்போது வெங்கையா நாயுடு வேறு விருந்து வைக்க ரெடியாகி உள்ளார். இதனால் திமுகவிற்கு யாரை ஆதரிப்பது என்ற தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது. இதை முன்னிட்டே முதல்வர் ஸ்டாலின் இன்று மூத்த நிர்வாகிகளுடன் இன்று சென்னையில் ஆலோசனை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.