சபாநாயகரின் ஒரே உத்தரவால் எல்லாம் சுபம்.. உயர்நீதிமன்றத்தில் வழக்கை வாபஸ் பெற்ற எடப்பாடி பழனிசாமி
சென்னை: சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அங்கீகரிக்கும்படி சபாநாயகருக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாபஸ் பெற்றுள்ளாார்.
2022ம் ஆண்டு ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஆர்.பி. உதயக்குமாரை அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஜூலை 17ல் நியமித்தார்.

சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக உதயகுமாரை அங்கீகரிக்கக் கோரியும், சட்டமன்றத்தில் தனக்கு அருகில் இருக்கை ஒதுக்கக் கோரியும் சபாநாயருக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி இருந்தார்.
ஐந்து முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
கட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கபட்டவர்களை அங்கீகரிக்கும்படி, சபாநாயகருக்கும், சட்டமன்ற செயலாளருக்கும் உத்தரவிட வேண்டும், இருக்கையை மாற்றியமைக்க சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தபோது, தற்போது எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை ஆர்.பி.உதயகுமாருக்கு கடந்த பிப்ரவரி 14ம் தேதி ஒதுக்கியதால் மனுவை திரும்பெற அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, மனுவை திரும்பெற அனுமதித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
என்ன நடந்தது? அதிமுக 2021 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த நிலையில், சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வமும் தேர்வு செய்யப்பட்டனர். இதனிடையே அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சினை காரணமாக துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக நீக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார்.
புதிய எதிர்க்கட்சி துணைத்தலைவராக மதுரை திருமங்கலம் எம்எல்ஏவான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு இறுதியில் சபாநாயகர் அப்பாவுவிடம் அ.தி.மு.க. சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டது.
ஆனால் எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையில் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து வந்தார். இதுகுறித்து சட்டசபை கூடும் போதெல்லாம் எடப்பாடி பழனிசாமி, இருக்கையை மாற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
சட்டசபையில் கடந்த பிப்ரவரி 13ம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக தங்களிடம் 4 முறை கடிதம் வழங்கியுள்ளோம். பலமுறை நேரில் வலியுறுத்தியுள்ளோம். எங்கள் கட்சி உறுப்பினர்களால் ஆர்.பி.உதயகுமார் எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதை நிறைவேற்றித் தரவேண்டும்" என்றார்.
அப்போது உடனே எழுந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "எதிர்க்கட்சி தலைவரின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்யுங்கள்" என்று சபாநாயகர் அப்பாவுவிடம் வேண்டுகோள் விடுத்தார். அவரும், நிச்சயம் தக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.. இந்த நிலையில், பிப்ரவரி 14ம் தேதி அன்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை மாற்றப்பட்டது. அதாவது, எடப்பாடி பழனிசாமி அருகே 206 எண் கொண்ட இருக்கையில் இருந்த அவர், தற்போது முன்னாள் சபாநாயகர் ப.தனபால் இருந்த 207 எண் கொண்ட இருக்கைக்கு மாற்றப்பட்டார். அதாவது, ஓ பன்னீர்செல்வம் சட்டசபையில் முதல் வரிசையில் இருந்து 2-வது வரிசைக்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்தே மனுவை திரும்பெற அனுமதி கேட்டு எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அதை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு தற்போது அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications