தேதி சொன்னால்.. காங்கிரஸில் இருந்து வரும் 10 பேருக்கும் உணவு ஏற்பாடு.. அண்ணாமலை கிண்டல் பதிவு
சென்னை: தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்து பதிவிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒடிசா மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள புகழ்பெற்ற ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் தமிழ்நாட்டிற்கு சென்று விட்டது என்று கூறியிருக்கிறார். அதாவது தமிழர்கள் திருடர்கள் என்று மோடி பேசுகிறார். தமிழர்கள் ஒடிசா மாநிலத்தை ஆள நினைக்கலாமா? என்பது போல் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி இருக்கிறார்.

தமிழ்நாட்டுக்கு வந்தால் திருக்குறள், இலக்கியம், இலக்கணத்தை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசுவார். ஆனால் தற்போது நரேந்திர மோடி, பிரதமர் என்கிற பொறுப்பில் இருப்பதை மறந்து, அநாகரீகமாக, சந்தர்ப்பவாதியாக பேசிக்கொண்டிருக்கிறார். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
இனிவரும் காலங்களில் தமிழர்களை அவமானப்படுத்தினாலோ, தமிழ் மொழியை கொச்சைப்படுத்தி பேசினாலோ, பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் இருக்க வாய்ப்பு இல்லை. ஒரு வாரத்திற்குள் தமிழ்நாட்டு மக்களிடம் மோடியும், அமித்ஷாவும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால், தமிழகத்தில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிடுவோம்.
வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ உடன் தற்போது தேர்தல் ஆணையமும் மோடி கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. அதனால் தான் பிரதமர் மோடி எதை பேசினாலும் தேர்தல் ஆணையம் கண்டு கொள்ள மறுக்கிறது. கும்பகர்ணன் போல தேர்தல் ஆணையம் தூங்கியபடி இருக்கிறது. தமிழக பாஜகவில் இருப்பவர்களுக்கு சூடு, சொரணை உள்ளதா ? மோடி, அமித்ஷா இருவரும் தமிழர்களை பற்றி இவ்வளவு பேசியுள்ளனர். ஒரு கண்டனத்தையாவது தமிழக பாஜகவினர் தெரிவித்துள்ளார்களா?" இவ்வாறு செல்வப்பெருந்தகை பேட்டியின் போது பேசியிருந்தார்,.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக தலைமை அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அறிவித்துள்ளதாக அறிந்தேன். எங்கள் அலுவலகம் வரவிருக்கும் தேதியை முன்பே அறிவித்தால், வரும் பத்து பேருக்கும், உணவு ஏற்பாடு செய்ய வசதியாக இருக்கும்.
மேலும், வரும் அனைவருக்கும், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்குச் செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம். எப்படி திமுகவும் காங்கிரஸும் தமிழினத்துக்கே எதிரியாக விளங்குகின்றன என்ற காணொளியையும், அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றவும் முடிவு செய்துள்ளோம்.
எனவே, காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் அவர்கள், எங்கள் மாநிலத் தலைமை அலுவலகம் வரவிருக்கும் தேதியை மட்டும், முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications