உணவு துறை அதிகாரிகள் சூப்பர் ஹீரோ அல்ல.. சதீஷ்குமார் சினிமாவில் நடிக்கலாம்.. ஹைகோர்ட் குட்டு
சென்னை: உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை ஊடகங்களில் வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஹோட்டல்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஆர்.ராஜ்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், மாநில உணவு பாதுகாப்பு துறை அதிகாரியான சதீஷ்குமார், உணவுப் பொருட்களின் மாதிரியை ஆய்வுக்கு எடுத்துக் செல்லும்போது விதிகளை பின்பற்றாமல், ஆய்வு செய்யும் நடைமுறையை அவருடைய விளம்பரத்திற்காக ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் நேரலை செய்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சோதனைக்கு எடுத்து சென்று அதில் தரக்குறைவு என நிரூபணம் ஆகும் வரை, தங்கள் உணவகங்களின் வணிக பெயர்கள் கெடுவதுடன், கடின உழைப்பால் சம்பாதித்த நற்பெயரையும், மக்கள் மத்தியிலான நல்லெண்ணத்தையும் களங்கப்படுத்துவதாகும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு
எனவே உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுபாட்டு சட்டத்திற்கு உட்பட்டு சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடவேண்டும் என அதிகாரி சதீஷ்குமாருக்கு உத்தரவிட வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. எஸ்.ராமன்,மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் விளம்பரத்திற்காக சதீஷ்குமார் தொடர்ந்து இப்படி செய்வதாகவும், உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ்குமார் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி பல்வேறு உணவகங்களில் பணம் கேட்டு மிரட்டியதால் உணவக உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளதாகவும் வாதிட்டார்.

ஊழியர்கள்
அப்போது நீதிபதி, அரசாங்கம் அதன் ஊழியர்களுக்கு அதிகாரம் கொடுப்பது மக்கள் நலனை காப்பதற்காகவே தவிர அதை தவறாக பயன்படுத்த அல்ல என்றும், தன்னிடம் அதிகாரம் உள்ளதால் தன்னை சூப்பர் ஹீரோவாக நினைத்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்தார்.

கெட்டு போன பொருள்
கெட்டுப்போன பொருள் தான் என்று ஆய்வகத்தில் உறுதிப்படுத்தபட்ட பின் சம்பந்தபட்ட இடத்தில் அவர் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளதாகவும், ஆனால் ஊடகங்களை ஏன் அழைத்து செல்கிறார் எனவும், விளம்பரம் வேண்டும் என்றால் திரைத்துறையில் சென்று நடிக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.

சோதனை
இனி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சோதனைக்கு செல்லும்போது துறை தொடர்புடைய புகைப்பட கலைஞர் அல்லது வீடியோ பதிவாளரை அழைத்து செல்லலாம் என்றும், அதன் பதிவுகளை விசாரணை முடிவில் தான் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அதுவரை ஊடகங்களுக்கு கொடுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

உணவகங்களில் திடீர் சோதனை
மேலும் உணவகங்களில் நடத்தப்படும் திடீர் சோதனைகளை ஊடகங்களில் வெளியிட தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதிஷ்குமாருக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதி, தமிழக அரசு, உணவு பாதுகாப்பு துறை, மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications