3 நாள் என் மனைவி அழுதார்.. அப்பாவுடன் சண்டை..! ஓய்வு ரகசியம் உடைத்த அஸ்வின்
சென்னை: தனது அப்பாவை 'டேய் தகப்பா' என ஒருமையில் கிண்டலடித்தது தொடர்பாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அவரது ஓய்வை திடீரென்று கடந்த வாரம் அறிவித்த போது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, அந்தச் செய்தி அவருடன் சேர்ந்து விளையாடிய சக வீரர்களுக்கே சர்ப்ரைஸ் ஆக இருந்தது. அவரது ஓய்வு பற்றி அஸ்வின் தந்தை அளித்த பேட்டி வைரலானதை தொடர்ந்து 'டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்?' என காமெடி கலந்த ஒரு பதிவை அஸ்வின் வெளியிட்டிருந்தார்.

அஸ்வின் மனைவி பிரிதி போட்ட ஒரு கமெண்ட் ரசிகர்கள் பலரை வியக்கச் செய்தது.'இனிமேல், உங்களுக்குப் பிடித்த உணவைச் சாப்பிடுங்கள். உங்களுக்கு என்ன விருப்பமோ அதைச் செய்யுங்கள். குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். நிறைய மீம்ஸ் ஷேர் பண்ணுங்கள்’ என்று தனது கணவரின் ஓய்வை ஒரு சக மனுஷியாக வாழ்த்தி இருந்தார்.
அவர் தன் கணவரின் ஓய்வை ஊர் அறிய வாழ்த்தி இருந்தாலும் உள்ளுக்குள் சில நாட்களாக அவர் அழுதுகொண்டுதான் இருந்தார் என்ற உண்மையை அஸ்வின் இப்போது போட்டு உடைத்துள்ளார். தனது ஓய்வைப் பற்றியும் பணியில் உள்ள இடையூறுகள் பற்றியும் அஸ்வின் மூன்று நாட்கள் முன்னதாகவே விளக்கி இருக்கிறார். விடைபெறலாம் என முடிவு செய்துள்ளேன் என்று கூறியுள்ளார். அதை அவர் மனம் ஏற்கவில்லை. மிகுந்த கஷ்டத்தில் சில நாட்கள் தன் கணவரின் முடிவைப் பற்றி உறவினர்களிடம் தொலைபேசியில் சொல்லி ஆலோசனை பெற்றுள்ளார்.
தன் மனைவியைப் போல் அல்ல அஸ்வின். அவர் எந்த நெருக்கடியான சூழலையும் எளிமையாகக் கடந்து போகும் தைரியம் உள்ளவர் என அவரே தெரிவித்துள்ளார். அவர் கிரிக்கெட் உலகில் இந்த உயரத்தைத் தொடப் பல போராட்டங்களைச் சந்தித்துள்ளார். அதை அவரது வாழ்க்கை புத்தகமான 'I Have the Streets’ படித்தவர்கள் அறிவார்கள். அவருக்கு விளையாட ஸ்டேடியம் இல்லை என்றால் தெரு இருக்கிறது என்பதை முன்பே அவர் எடுத்துக் காட்டி இருக்கிறார்.
இந்தியில் சொன்னால் அவர் ஒரு கல்லி கிரிக்கெட்டிலிருந்து உருவான வீரர். ஆகவே, சுமைகளை அவரால் எளிதாகக் கடக்க முடியும். அதனால்தான் அவர் ஓய்வை அறிவித்ததும் பலர் அவரின் புத்தகத்தின் அட்டைப்படத்தைப் போட்டு அவரை வாழ்த்தி இருந்தனர்.
தனது மனைவி பிரிதி இன்ஸ்டாகிராமில் தன்னைப் பற்றி சொன்ன விசயங்களைப் படித்த போது அதை அவரது குரலில் கேட்பதைப் போல ஒரு உணர்வு வந்தது என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது அனைத்தும் அப்படியே உண்மை என்பதையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார் தன் மனைவி மனதிலிருந்த விசயத்தை மூடி மறைக்காமல் பேசியதை தான் அதிகம் ரசித்ததாகவும் கூறியிருக்கிறார். அவர் கோபிநாத்துக்கு அளித்துள்ள பேட்டியில் மனம் திறந்து பல விசயங்களைப் பேசி இருக்கிறார்.
அஸ்வின் தன் பேட்டியில், “இது லைக் அண்ட் ஷேர் உலகம். அதில்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நாம் பலரும் எதை அதிகம் பார்க்கவேண்டும் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ அதையே ஷேர் செய்வோம். அதைப் போன்றுதான் நான். எதையும் தைரியமாக வெளியே பேசிவிடுவேன். மறைக்க மாட்டேன். அதற்காகப் பிறரை காயப்படுத்தமாட்டேன்” என்று கூறியுள்ளார்.
அப்பா அளித்த பேட்டிக்காக 'டேய் தகப்பா’ என்று கிண்டலாகப் பேசியது தொடர்பாகப் பேசிய அஸ்வின், “30 வயதைக் கடந்ததும் பெற்றோரை திருத்த வேண்டும் எனப் பிள்ளைகள் நினைப்பார்கள். அது தவறு. நான் வீட்டில் அப்பா, அம்மாவுடன் அடிக்கடி சண்டை போடுவேன். என் மனைவி திருமணமாகி வீட்டுக்கு வந்த புதிதில் அதைப் பார்த்துப் பயந்து போய்விட்டார். பின்னால் எங்களைப் புரிந்து கொண்டார்” என்று பேசி இருக்கிறார் அஸ்வின்.












Click it and Unblock the Notifications