எங்களுக்கு தொண்டை முக்கியம்.. தொண்டை போனால் தொண்டு போய்விடும்.. மருத்துவ மாநாட்டில் மு.க.ஸ்டாலின்!
மருத்துவத் துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
சென்னை: மருத்துவத் துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காது, மூக்கு, தொண்டை, நலன் குறித்து தமிழில் நடக்கும் மருத்துவ மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு தொண்டை முக்கியம், தொண்டை போய்விட்டால் தொண்டு போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் காது, மூக்கு, தொண்டை நலன் குறித்த மருத்துவ அறிவியல் மாநாடு முதல்முறையாக தமிழில் நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன்பின்னர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த மாநாடு முழுக்க முழுக்க தமிழில் நடைபெற உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் என்று சொல்லும் போது, எங்களை ஆளாக்கிய முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் எப்போதும் நினைவுக்கு வருவார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 3ல் அமைதிப் பேரணி.. கட்சி நிர்வாகிகளுக்கு திமுக அழைப்பு!
மருத்துவ மாநாடு
தமிழை தமிழே என்று அழைக்கக் கூடிய சுகம் கிடைக்காது என்று கருணாநிதி கூறுவார். அப்படிப்பட்ட அழகு தமிழ் மொழியில் மாநாடு நடப்பது பாராட்டுக்குரியது. ஏனென்றால் இதுபோன்ற மருத்துவ மாநாடுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடக்கும். கோட் சூட் அணிந்து நடந்து வருவார்கள். ஆனால் இங்கே மாநாட்டை நடத்துவோரே, வேஷ்டி சட்டை அணிந்து அமர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் முத்தமிழ் பேரவையில் மாநாடு நடந்து வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் வடமாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசிய பேச்சு அதிகமாக பகிரப்பட்டது. தமிழ்நாட்டிற்கு வந்து வாழும் வடமாநிலத்தவர், தமிழ்நாடு எந்த வகையில் எல்லாம் எங்களுக்கு பயணளிக்கிறது என்பது பற்றி அந்த பெண் சொல்லுகிறார். எனது மகனுக்கு வயது 1 வரை காது கேளாமல், வாய் பேச முடியாமல் இருந்தது. மருத்துவரிடம் சென்று காட்டினேன். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர், உங்களிடம் ரேஷன் கார்டு இருக்கிறதா என்று கேட்டார். ஏனென்றால் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு இருந்தால் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்யப்படும் என்றார்.
வடமாநில பெண்
ரேஷன் கார்டு வாங்கி, அதன் மூலம் என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்தேன். இன்று என் மகன் பேசுகிறான் என்று அந்த பெண் சொன்னார். இதற்கு காரணம் அன்றைக்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி. ஆனால் அந்த திட்டத்தை தூண்டியவர் இங்கு அமர்ந்திருக்கும் மருத்துவர் மோகன் தான். இதனை ஜெனிவா மாநாட்டில் சொல்லி, 2 ஆயிரம் குழந்தைகளுக்கு காது கேட்கிறது, வாய் பேசுகிறார்கள். அதற்கு காரணம் கருணாநிதி என்று சொல்லி, அவரின் படத்தையும் போட்டு காட்டினார். இன்று இந்தத் திட்டம் மேலும் வளர்ந்து 4,681 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு செய்யப்பட்டுள்ளது.
தொண்டை முக்கியம்
இந்த அழைப்பதில் காது, மூக்கு, தொண்டை பற்றிய திருக்குறளை அச்சிட்டு, திருவள்ளுவரையே மருத்துவர் போல் மாற்றிவிட்டார்கள். செவித் திறன் குறை சிலருக்கு பிறக்கும் போதே இருக்கிறது. அதேபோல் குழந்தைகளுக்கு காதுகேளாமை குறைபாடு அதிகளவில் வருகிறது. இதற்கு மரபுவழி பிரச்சினையாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் எங்களை போன்ற அரசியல்வாதிகளுக்கு தொண்டை மிகமிக முக்கியம். தொண்டை போய்விட்டால் தொண்டே போய்விடும். காது, மூக்கு, தொண்டை ஆகியவை ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. தாய் மொழியில் மாநாடு நடத்தப்படுவது பொருத்தமாக அமைந்திருக்கிறது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
நிர்வாகத்தில் தமிழ், ஆட்சியில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், இசையில் தமிழ், பள்ளிகளில் தமிழ் என்று எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் கூட மருத்துவ நூல்களை தமிழில் மொழிபெயர்த்து தமிழில் வெளியிட்டுள்ளோம். அதேபோல் மருத்துவம் நவீனமாகி வருகிறது. ஆனால் அதிக செலவுகள் செலவழிக்க வேண்டியதாக இருக்கிறது. அனைவருக்கும் நவீன மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும். அரசு சார்பாக ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது.
மெடிக்கல் சிட்டி
ஆனால் ஏராளமான மக்கள் வாழும் நாட்டில் அரசு மருத்துவமனையால் மட்டும் சேவை வழங்கினால் போதாது. தனியார் பங்களிப்பும் முக்கியமானதாக இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் ஏழைகளுக்கு குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க வேண்டும். கல்வியும், மருத்துவமும் சேவை துறைகளாக செயல்பட வேண்டும். சென்னைக்கு மெடிக்கல் கேப்பிடல் என்று பெயர். அந்த வகையில், மருத்துவத்துறையில் தமிழ்நாடு தன்னிறைவு பெற்ற மாநிலமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.