என்ன பெரிய திருச்சி கூட்டம்.. மதுரைல எனக்கு கூடின கூட்டம் தெரியுமா? – விஜய்க்கு சரத்குமார் பதிலடி
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க இதில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இந்நிலையில் நடிகர் சரத்குமார் தான் தொடங்கிய சமக கட்சியை பாஜகவுடன் இணைந்தார். நடிகர்கள் அரசியல் பெரிதாக கைக்கொடுக்காது என்ற விமர்சனம் உள்ளது. அதேநேரத்தில் விஜய் நிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகளவு கூடுவதால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சரத்குமார், விஜய்க்கு கூட்டம் கூடியது ஓகே, நானும் கேரியர் உச்சத்தில் அரசியலுக்கு வந்தவன். எனக்கும் கூட்டம் கூடியது என்று கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விஜய் கொள்கை, கோட்பாடு இல்லாமல் எதிர்ப்பு அரசியலை மட்டுமே கையில் எடுத்திருக்கிறார். இதுவரை விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு, மக்களுக்கு நன்மை செய்வேன் என்கிறார். ஆனால் புதுமையாக என்ன திட்டம் வைத்திருக்கிறார், என்ன செயல் திட்டங்கள் வைத்துள்ளார் என்று தெளிவு அவரிடம் இல்லை.

விஜயிடம் திட்டம் இல்லை
கட்சி ஆரம்பிக்கும் அனைவரும் ஆட்சியை பிடிப்போம் என்று தான் சொல்வார்கள். விஜய் அதை சொல்வதில் தவறு இல்லை. வீக் எண்ட் அரசியல் பிரச்சாரம் மூலம் வித்தியாசமான அரசியல் செய்கிறார். என்ன திட்டத்தில் அப்படி செய்கிறார் என்று தெரியவில்லை. என்னை பொறுத்தவரை மக்களை சந்திக்க வேண்டும். அவர் மக்களை சந்திக்கிறார்.
அதை எப்படி கொண்டு செல்லப் போகிறார் என தெரியவில்லை. மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள். மக்களுக்கு என்ன தவறு நடந்து கொண்டிருக்கிறது என்பதை அவர் கூற வேண்டும். நீட் தேர்வை திமுக எதிர்ப்பதால் இவர்களும் எதிர்க்கிறார்கள். தேசியக்கல்வி கொள்கையை திமுக எதிர்ப்பதால் இவர்களும் எதிர்க்கிறார்கள். திமுகவின் கிளை கட்சி போல தான் தவெக செயல்பாடுகள் உள்ளன.
எனக்கும் கூட்டம்
ஹஎல்லோருக்கும் கூட்டம் வரும். 1996 நானும் கூட்டத்தை பார்த்தவன். எனக்கும் தான் கூட்டம் கூடியது. அப்போது சமூகவலைதளங்கள் கிடையாது, ஊடகங்கள் கிடையாது. என்னிடம் உள்ள அப்போதைய காணொளி காட்சிகளை காட்டுகிறேன். மதுரையில் நான் கூட்டியது மிகப்பெரிய கூட்டம். கூட்டத்தை காட்டி பெருமைப்பட வேண்டும் என நான் சொல்லவில்லை.
சூரியவம்சம், நாட்டாமை மாதிரியான வெற்றிப் படங்களை கொடுத்துவிட்டு தான் நான் அரசியலுக்கு வந்தேன். நான் ரிட்டயர்டு ஆன பிறகு அரசியலுக்கு வரவில்லை. 1996 ஆம் ஆண்டு நானும் உச்ச நடிகராக இருந்த போது தான் அரசியலில் நுழைந்தேன். நான் பல கூட்டங்களை பார்த்துவிட்டேன். நிறைய பேருக்கு கூட்டம் கூடும். பிரபலம் என்றால் கூட்டம் வரத்தான் செய்யும்.
மக்களிடம் கொள்கைகள் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்துவதன் மூலம் தான் ஆட்சியில் அமைக்க முடியும். இன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள். அதேநேரத்தில் பெரியாரை பற்றி பேச வேண்டும் என்கிற மனநிலை எனக்கு இல்லை. பெரியார் ஏற்படுத்திய புரட்சியை மக்கள் ஏற்கிறார்களா என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கிறது." என்றார்.












Click it and Unblock the Notifications