இனி நடராஜன்கள் அதிகம் கிடைப்பார்கள்.. கிரிக்கெட்டின் அடுத்த நகர்வு.. டிஎன்பிஎல் ஏலம் ஏன் முக்கியம்?
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் முதல் ஏலத்தின் முதல் நாள் முடிவடைந்துள்ளது.
சென்னை: எந்தவொரு விளையாட்டும் மக்களுக்கான விளையாட்டாக மாறவில்லை என்றால், அது எவ்வளவு சிறந்த விளையாட்டாக இருந்தாலும், மக்களால் நிராகரிக்கப்படும். அந்த வகையில் சாதாரண ஒரு பந்து இருந்தாலும் போதும் என்ற வகையில் கால்பந்தும், தென்னை மட்டையும், ஒரு பந்தும் போதும் என்ற வகையில் கிரிக்கெட் கோடிக்கணக்கான ரசிகர்களால் விளையாடப்பட்டு வருகிறது.
இன்றுவரை கிரிக்கெட் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பதற்கு அதன் எளிமையும், அதனை சுற்றிய வணிகமும் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் எந்த பகுதிக்கு சென்றாலும், அங்கே கிரிக்கெட் விளையாடும் சிறுவர்களும், கிரிக்கெட் பார்க்கும் பெரியவர்களையும் காண முடியும்.
நாளடைவில் கிரிக்கெட் என்பது விளையாட்டு என்பதை கடந்து, திறமையை வெளிப்படுத்தும் இடமாகவும், வணிகத்திற்கான இடமாகவும் மாறியுள்ளது. அதனால் தொழில்முறை கிரிக்கெட் வீரர் என்ற பதமும் உருவாகியது. அந்த தொழில்முறை கிரிக்கெட் வந்த பின் ஐபிஎல், டிஎன்பிஎல் என்று கிரிக்கெட்டின் வளர்ச்சி கற்பனைக்கும் எட்டாத வகையில் வளர்ந்து வருகிறது.

டிஎன்பிஎல் ஏலம்
அண்மையில் மகளிர் ஐபிஎல் தொடருக்கான முதல் ஏலம் நடைபெற்று முடிந்த சூழலில், தமிழ்நாடு கிரிக்கெட் பிரீமியர் லீக் தொடருக்கான முதல் ஏலத்தை நடத்திக் காட்டி இருக்கிறது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம். நடராஜன், சாய் சுதர்சன், ஜெகதீசன், அபராஜித், ஷாரூக் கான், சாய் கிஷோர், வாஷிங்டன் சுந்தர் என்று ஏராளமான கிரிக்கெட் வீரர்களை டிஎன்பிஎல் உருவாக்கியுள்ளது. இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில், 7வது சீசனுக்கான கிரிக்கெட் தொடர் ஜூன் மற்றும் ஜூலை மாதங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

942 கிரிக்கெட் வீரர்கள்
டிஎன்பிஎல் 2023ம் ஆண்டிற்கான ஏலம் இன்று மற்றும் நாளை மகாபலிபுரத்தில் உள்ள ஐடிசி கென்சஸ் ஹோட்டலில் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 942 கிரிக்கெட் வீரர்கள் டிஎன்பிஎல் ஏலத்தில் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு உரிமையாளருக்கும் மொத்த ஏலத்தொகை ரூ. 70 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக நடந்த ஏலம்
8 அணிகளும் அதிகபட்சம் இரண்டு வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளலாம். மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்தில் இடம் பெறுவார்கள். மொத்தம் 942 வீரர்களை கொண்டு நடத்தப்படும் இந்த ஏலத்தில் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடியவர்கள், டிஎன்பிஎல் அனுபவம் கொண்ட வீரர்கள், மற்ற வீரர்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஏலம் வேண்டுமானால் மிக சாதாரணமாக நடந்திருக்கலாம்.

எதிர்காலம்
ஆனால் இன்னும் சில ஆண்டுகளில் ஒவ்வொரு அணியும் கிராமத்தில் இருந்தும், மூலை முடுக்குகளில் இருந்தும் கிரிக்கெட் வீரர்களை தேடி பிடித்து வருகிறது. சாதாரணமாக பார்க்கப்பட்ட ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி இன்று செய்திருக்கும் முயற்சியை, ஒருநாள் டிஎன்பிஎல் அணிகள் செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும்.

நடராஜன்கள் கிடைப்பார்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் வீரர்களும் இனி எப்படி டிஎன்பிஎல் தொடரில் விளையாடலாம் என்று தேட தொடங்கும் போது, கிரிக்கெட்டின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி நகரும். கிரிக்கெட் வீரர்களுக்கான ஊதியமும், அவர்களுக்கு தேவையான பயிற்சியும் அனைத்து பகுதிகளிலும் கிடைக்கப்பெறும். அப்படி நகரும் பட்சத்தில் இன்னும் ஏராளமான நடராஜன்கள் இந்தியாவுக்கு கிடைப்பார்கள்.












Click it and Unblock the Notifications