தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக! அமைச்சர் பதவியில் இருப்பவர் விசாரணை கைதி!
சென்னை: அமைச்சர் பதவியில் இருக்கும் ஒருவர் விசாரணை கைதியாக கைது செய்யப்பட்டிருக்கும் நிகழ்வு தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக நடந்திருக்கிறது.
இதை படிக்கும் போது பலருக்கும் ஏன் ஜெயலலிதா கூடத்தான் முதலமைச்சராக இருந்தபோதே சிறைக்கு சென்றார் என எண்ணத் தோன்றும். அவரும் கேபினெட் அமைச்சர் தானே என கேட்கத் தோன்றும். அவர் கதை வேறு செந்தில்பாலாஜி கதை வேறு. டான்சி வழக்கு, சொத்துக் குவிப்பு வழக்கு என இரண்டு வழக்குகளிலுமே நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு ஜெயலலிதா சிறைக்கு சென்றார்.

ஆனால் செந்தில்பாலாஜியோ விசாரணை நிலையிலேயே கைதாகியிருக்கிறார். இதற்கு முன்னர் தமிழகத்தில் அமைச்சராக இருக்கும் போதே யாரும் விசாரணை கைதியாக கைது செய்யப்பட்ட வரலாறில்லை. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபிறகு விசாரணை கைதியாக கைது செய்யப்பட்ட வரலாறு உண்டு, நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட வரலாறு உண்டு.
செந்தில்பாலாஜி ஒருவர் தான் அமைச்சராக இருக்கும் போதே, அதுவும் பவர்ஃபுல் சிட்டிங் அமைச்சராக இருக்கும் போதே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்று ஆட்சி மாற்றம் நடந்த பிறகு முன்னாள் அமைச்சர் என்ற முறையில் விசாரணை கைதியாக அரெஸ்ட் ஆவது இயல்பானது.
1990கள் வரை ஊழல் குறித்த பெரிய விழிப்புணர்வு இல்லாததால் அதற்கு முன் சொத்துக்குவிப்பு, ஊழல், லஞ்சம் போன்ற விவகாரங்கள் எல்லாம் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு தான் அதிமுக ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து திமுக கண்கொத்தி பாம்பாக ஆராயத் தொடங்கியது.
அதற்கு பலனாக சுடுகாட்டுக் கொட்டகை ஊழல் வழக்கில் அப்போது அமைச்சராக இருந்த செல்வகணபதி சிறைக்கு சென்றார். இவர் சிறைக்கு சென்ற போது அமைச்சர் பதவி வகிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் திமுகவில் மாவட்டச் செயலாளராக இருக்கிறார் அது தனிக்கதை.
அதேபோல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அதிமுக ஆட்சியில் கல்வித்துறை அமைச்சராக இருந்த மருங்காபுரி பொன்னுசாமி 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தார். இவர் சிறைக்கு சென்ற போது அமைச்சராக பதவி வகிக்கவில்லை. பொன்னுச்சாமியை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய தகவல் என்னவென்றால், மற்ற அரசியல்வாதிகள் போல் சாக்குபோக்குகளை சொல்லி நீதிமன்றத்தில் வாய்தா வாங்கி வழக்கை இழுத்தடிக்காமல் ஃபாரின் போவது போல் டக்குனு 3 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வெளியே வந்துவிட்டார்.
அதேபோல் தான் திமுக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, வீரபாண்டி ஆறுமுகம் உட்பட பலரும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்ட போது முன்னாள் அமைச்சர்களாகவே இருந்தனர்.
அதேபோல் கடந்த 2006 -2011 திமுக ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பு புகாரில் சிக்கிய அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவை, அவர் வகித்த அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்து அதன் பிறகு காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ள வைத்தார் கருணாநிதி.
டெல்லி உள்ளிட்ட வேறு மாநிலங்களில் அமைச்சராக இருக்கும் போதே விசாரணைக் கைதிகளாக கைது செய்யப்பட்ட நிகழ்வு நடந்ததுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் முதல்முறையாக அமைச்சராக இருக்கும் ஒருவர் விசாரணை கைதியாக கைதாகியிருப்பது செந்தில்பாலாஜி மட்டுமே.












Click it and Unblock the Notifications