முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு! கார்த்திகேய சிவசேனாபதி தலைவராக நியமனம்!
சென்னை: வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன் பேண முதல்முறையாக புலம்பெயர் தமிழர் நல வாரியத்தை அமைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
புலம்பெயர் தமிழர் நல வாரியத்தின் தலைவராக கார்த்திகேய சிவசேனாபதியையும், உறுப்பினர்களாக 7 பேரையும் முதல்வர் நியமித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு;

தூதரக உதவிகள்
பரந்து கிடக்கும் இவ்வுலகில், எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்குத் தமிழ்நாடுதான் தாய்வீடு என்பதை நன்குணர்ந்து, உலகத் தமிழர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டும் அல்ல; அவர்களை அரவணைப்பதும், பாதுகாப்பதும் தாய்த் திருநாடான தமிழ்நாடுதான். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கென நலத் திட்டங்கள், தூதரக உதவிகள், வெளிநாடுகளில் தமிழ்க் கல்வி, கலை, பண்பாடு மற்றும் கருத்துப் பரிமாற்றத்திற்கென பல்வேறு சீர்மிகு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்
அந்தவகையில், பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைத்திடவும், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்திடவும், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் உளப்பூர்வமான மற்றும் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொருட்டு, 'வெளிநாடுவாழ் தமிழர் நலச்சட்டம்' 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கலைஞர் அரசால் இயற்றப்பட்டது. அதோடு, "புலம்பெயர் தமிழர் நலவாரியம்" ஒன்று உருவாக்கப்பட்டு, அவர்களுக்கென நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அப்போது அறிவிக்கப்பட்ட நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது, முந்தைய ஆட்சியாளர்கள் அதனை நடைமுறைப்படுத்த முன்வரவில்லை.

ஸ்டாலின் உத்தரவு
இந்த நிலையில், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தபிறகு, முதலமைச்சர் ஸ்டாலின், 'வெளிநாடுவாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்ற அறிவிப்பினை வெளியிட்டார். இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும்விதமாக, கீழ்க்காணும் தலைவர், அரசு சார் அலுவலர்கள் மற்றும் அயலகத் தமிழர் பிரதிநிதிகளை உறுப்பினர்களாக கொண்டு புலம்பெயர் தமிழர் நல வாரியத்தினை அமைத்திடமுதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைவர் -உறுப்பினர்கள்
அதன்படி, புலம்பெயர் தமிழர் நலவாரியத்தின் தலைவராக திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பழையகோட்டையைச் சேர்ந்த கார்த்திகேய சிவசேனாபதியும்,
மொரிஷியஸ் நாட்டில் வசிக்கும் திரு. ஆறுமுகம் பரசுராமன்;
லண்டனில் வசிக்கும் திரு. முஹம்மது பைசல்;
ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் திரு. சித்திக் சையது மீரான்;
வடஅமெரிக்காவில் வசிக்கும் திரு. கால்டுவெல் வேள்நம்பி;
சிங்கப்பூரில் வசிக்கும் திரு. ஜி.வி.ராம் என்கிற கோபாலகிருஷ்ணன் வெங்கடரமணன்;
மும்பையில் வசிக்கும் திரு. அ. மீரான் மற்றும் சென்னையில் வசிக்கும் வழக்கறிஞர் திரு. புகழ்காந்தி ஆகியோர் அரசு சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகள் பதவி
இவ்வாரியத்தில் நியமிக்கப்படும் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக் காலம், ஆணை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் ஆகும். இவ்வாரியம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நலத் திட்டங்களை செம்மையாகச் செயல்படுத்திட ஏதுவாக, 5 கோடி ரூபாய் "வெளிநாடுவாழ் தமிழர் நலநிதி" என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும். அதோடு மட்டுமல்லாமல், மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 இலட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ஆண்டுதோறும்

என்னென்ன உதவிகள்?
இவ்வாரியத்தின் வாயிலாகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு ஏதுவாக, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்களின் விவரங்களைச் சேகரிப்பது அவசியமாதலால், அவர்கள் குறித்த தரவு தளம் (database) ஒன்று ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம், மருத்துவக் காப்பீடு திட்டம் மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும். வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள், அங்கு பணியின்போது இறக்க நேரிடின், அவர்களது குடும்பத்தைப் பாதுகாக்கும் நோக்குடன், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications