திருவிழாக் கோலத்தில் மாமல்லபுரம்! தமிழக உணவுகளை ருசித்து மகிழும் வெளிநாட்டு செஸ் வீரர்கள்!
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக தமிழகம் வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் இங்குள்ள உணவுகளை ஆர்வமுடன் ருசித்து மகிழ்கின்றனர்.
187 நாடுகளில் இருந்து 2,000-க்கும் மேற்பட்டோர் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வது முதல் அவர்களை தங்க வைப்பது, உணவு வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் தமிழக அரசே செய்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட்
187 நாடுகளில் இருந்து வீரர்களும், பார்வையாளர்களும் தமிழகத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இவர்களுக்கான விருந்தோம்பலை தமிழக சுற்றுலாத் துறையே கவனித்துக் கொள்கிறது. அரிசி சாதம், தால், தோசை, இட்லி, சாம்பார், காய்கறி பொறியல் உள்ளிட்ட உணவு வகைகளை வெளிநாட்டு வீரர்கள் ருசித்து மகிழ்கின்றனர்.

செஸ் வீரர்கள்
இவைகளை தவிர வெளிநாட்டு உணவு வகைகளும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்படுகின்றன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்கள் சென்னை வந்தடைந்துவிட்டனர். இன்று இரவும் நாளை மாலைக்குள்ளும் எஞ்சிய நாடுகளில் இருந்து செஸ் விளையாட்டு வீரர்கள் சென்னை வந்தடைந்து விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிதவைப் பேருந்து
வெளிநாட்டு வீரர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதிகளுக்கு அழைத்துச்செல்ல மிதவை சொகுசுப் பேருந்துகள் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதேபோல் நாம் ஏற்கனவே தெரிவித்ததை போல் சென்னைக்கு வந்திறங்கும் வெளிநாட்டு செஸ் வீரர்களுக்கு தமிழக சுற்றுலா துறை சார்பில் அவர்களை வரவேற்கும் விதமாக கைத்தறித்துண்டுகள் அணிவிக்கப்படுகின்றன.

ஆர்வமுடன் செல்ஃபி
சென்னை விமான நிலையத்தில் பிரம்மாண்டமாக நிறுவப்பட்டிருக்கும் செஸ் ஒலிம்பியாட் 2022 தம்பி லோகோவை ஆர்வமுடம் பார்க்கும் செஸ் வீரர்கள், அதன் முன் நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.












Click it and Unblock the Notifications