அடுத்த வருஷம் எலக்சன் வருது.. விஷேச வீடுகளை குறிவைக்கும் ’மாஜிக்கள்’.. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!
சென்னை: 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதே அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம், பூத் கமிட்டி ஏஜென்ட்களுடன் ஆலோசனை என பிசியாக இருக்கின்றன. இந்நிலையில் கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த முன்னால் அமைச்சர்களும், முன்னால் எம்எல்ஏக்களும் தற்போது தொகுதி பக்கம் தலை காட்ட ஆரம்பித்திருக்கின்றனர். கல்யாண வீடுகள் தொடங்கி எங்கு வாழை தோரணம் இருந்தாலும் அட்டனன்ஸ் போட்டு அமௌன்ட் கொடுத்து தங்கள் இருப்பை காட்டிக் கொண்டு வருகின்றனர்.
2021 ஆம் ஆண்டு தான் திமுக தலைவராக பொறுப்பேற்று பிறகு சந்தித்த முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார். மு.க.ஸ்டாலின். இதுவரை திமுக தொடர்ந்து இருமுறை ஆட்சி அமைத்ததில்லை என்ற குறையை போக்க 2026 தேர்தலிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க அடுத்தடுத்த இரு சட்டமன்றத் தேர்தலில் தோற்காத கட்சி, இரண்டு முறை அடுத்தடுத்து ஆட்சி அமைத்த கட்சி என்ற பெருமையை பெற்ற அதிமுகவும் 2026 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க தீவிரமாக களப்பணியை தொடங்கி இருக்கிறது.

2026 சட்டமன்ற தேர்தல்
திமுக சார்பில் கடந்தாண்டே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டது. கேஎன் நேரு, உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தேர்தல் குழு ஆரம்பிக்கப்பட்டு பணிகளை தீவிர்ப்படுத்தி உள்ளது. தற்போது இரு பிரதான கட்சிகளும் கூட்டணியை வலுப்படுத்த பேச்சுவார்த்தைகளை துவக்கி இருக்கின்றன. இது ஒரு புறம் இருக்க கடந்த தேர்தலில் அதிமுக தரப்பில் போட்டியிட்ட பல மூத்த முன்னாள் அமைச்சர்கள் படுதோல்வியை சந்தித்தனர். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக அவர்கள் வெளியில் கூட அதிகமாக தலை காட்டவில்லை.
அதிமுக
ஒரு சிலர் மட்டுமே கட்சி நிகழ்ச்சிகளில் ஆர்வமாக கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே இருக்கும் நிலையில் பல முன்னாள் அமைச்சர்கள் தற்போது அதிகம் வெளியே வர தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், கேசி வீரமணி உள்ளிட்ட பலர் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். கட்சியின் நிகழ்ச்சிகளில் கூட அதிகமாக கலந்து கொள்ளாதவர்கள் தற்போது கடந்த சில தினங்களாக அதிக அளவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் அமைச்சர்கள்
அதிமுகவினர் மட்டுமல்லாது, பொதுமக்கள் யார் அழைப்பு கொடுத்தாலும் அவர்களது இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். திருமணம், புதுமனை புகுவிழா, பூப்புனித நீராட்டு விழா, கிடா வெட்டு, காது குத்து என எந்த சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தட்டாமல் கலந்து கொள்கின்றனர். மேலும் துக்க நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தவறாமல் கலந்து கொண்டு, அவ்வப்போது நிதி உதவியும் அளித்து வருகின்றனர்.
கேசி வீரமணி
இது தொடர்பாக அதிமுகவினரிடம் விசாரித்த போது தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தொகுதி பக்கமே வராதவர் என்ற குறையை போக்க பல முன்னாள் அமைச்சர்கள் வெளியே வருகின்றனர். குறிப்பாக ஜோலார்பேட்டையில் இரண்டு முறை வெற்றி பெற்ற தேசிய வீரமணி கடந்த தேர்தலில் எதிர்பாராமல் தோல்வியை சந்தித்தார். கிட்டத்தட்ட 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அவரது தோல்வி இருந்தது.
கள அரசியல்
கடந்த நான்கு ஆண்டுகளாக அதிகமாக வெளியே வராத அவர் தற்போது தீவிர அரசியலுக்கு திரும்பி இருக்கிறார். தற்போதைய திமுக எம்எல்ஏவும் மக்களை சந்திப்பதில்லை என்ற குறை இருக்கும் நிலையில் அதனை சரி செய்ய அவர் ஆர்வம் காட்டவில்லை. இதனை பயன்படுத்திக்கொண்டு வீரமணி தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார். காலை 6 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் இரவு 11 மணிக்கு தான் திரும்புகிறார். யார் அழைப்பு விடுத்தாலும் தவறாமல் கலந்து கொள்கிறார்.
தேர்தலில் தோல்வி
அது மட்டும் அல்லாமல் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணமும் மேற்கொள்கிறார். அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளிலும் தலைகாட்டி வருகிறார். இந்த தேர்தலிலும் தோல்வி அடைந்தால் அரசியல் வாழ்வு அஸ்தமனம் ஆகிவிடும் என்பதால் அவரை எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது. மேலும் ஆதரவாளர்களை வைத்து போஸ்டர்கள் பேனர்கள் என கலக்கி வருகிறார். மக்களின் சுக துக்கங்களில் பங்கெடுத்து கொள்கிறார் என காட்டிக்கொள்ளவே இந்த ஏற்பாடு.
தொண்டர்கள் உற்சாகம்
வீரமணி மட்டுமல்ல கடந்த தேர்தலில் தோல்வியை சந்தித்த பல மூத்த முன்னாள் அமைச்சர்களும் தற்போது தொகுதி முழுக்க வலம் வருகின்றனர்.மேலும் தற்போது வெற்றி பெற்றவர்களும் இதுவரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் தற்போது அடிமட்ட தொண்டன் பத்திரிக்கை வைத்தால் கூட பிளக்ஸ், பேனர் ஒன்றாவது வைத்து விட வேண்டும் என கட்டளையிட்டு அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இதனால் அதிமுகவினரும் உற்சாகமாகி உள்ளனர். இனி வரும் நாட்களில் அடிக்கடி அதிமுக தலைகளை பொது இடங்களில் பார்க்க முடியும் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications