“பட்ஜெட்டில் ஒண்ணுமே இல்லை.. பெரிய ஏமாற்றம்”.. முன்னாள் நிதி அமைச்சர் ஓபிஎஸ் சொன்னதை பாருங்க!
சென்னை: திமுக அரசு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை, ஏழைகளை ஏமாற்றுகின்ற பட்ஜெட் என முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமரிசித்துள்ளார்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் இன்று 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முந்தைய 3 நிதி நிலை அறிக்கைகளை பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்திருந்த நிலையில், இந்த நிதிநிலை அறிக்கையை தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். தங்கம் தென்னரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட் இது.

இந்த பட்ஜெட்டில், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திட , தமிழ் புதல்வன் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். ஆறு முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் நேரடியாக வழங்கப்படும். இதற்கு ரூ. 360 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காலை உணவுத் திட்டம் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1-5ஆம் வகுப்புவரை விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்திற்காக இந்த ஆண்டு 13,720 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். பெண்களின் இலவசப் பயணத் திட்டத்திற்காக இந்த ஆண்டு ரூ. 3,050 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
உயர்கல்வியை தொடர விரும்பும் மூன்றாம் பாலினத்தவரின் கல்விக்கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை அரசே ஏற்கும். வரும் நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட் அறிப்பை திமுக கூட்டணி கட்சிகள் பாராட்டி வரும் நிலையில், இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இது தொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை, கடன் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கடன் 8,33,362 கோடி ரூபாயாக உயர்கிறது. இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு முகாமில் வீடு கட்டும் பணியில் மெத்தனப்போக்கு உள்ளது. போக்குவரத்துக் கழகத்திற்கு எத்தனை பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டன? எத்தனை பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டன? என்ற விவரம் பட்ஜெட்டில் இல்லை.
கல்விக்கடன் தள்ளுபடி குறித்து எதுவுமில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபின் தொழில்துறைக்கு என்னென்ன அறிவிக்கப்பட்டுள்ளன? அவற்றில் எத்தனை பயன்பாட்டிற்கு வந்துள்ளன என நிதிநிலை அறிக்கையில் எதுவுமில்லை. மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளுக்கு 1,000 பேருக்கு பயிற்சி என்ற அறிவிப்பு யானைப்பசிக்கு சோளப்பொறி அறிவிப்பு போன்றது.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தி.மு.க அரசே நடத்தாமல் மத்திய அரசை வலியுறுத்துவது சமூகநீதி அக்கறை இல்லாததைக் காட்டுகிறது. மாதம் ஒரு முறை மின் கட்டணம், பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு நிறைவேற்றப்படாதது பெருத்த ஏமாற்றம் அளிக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications