நல்லதை பேசுங்க.. அதிமுக - பாஜக கூட்டணி முறிவு குறித்து பதிலளிக்காமல் நழுவிய ஓபிஎஸ்!
சென்னை: பாஜகவுடன் இனி கூட்டணி கிடையாது என அதிமுக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக ஓ பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓ பன்னீர் செல்வம் பதில் எதுவும் கூறாமல் சென்று விட்டார்.
பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகுவதாக அறிவித்தது. நேற்று முன் தினம் நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் தீர்மானத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை அதிமுக வெளியிட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதற்கு அண்ணாமலை அண்ணா, ஜெயலலிதா குறித்து விமர்சித்தது காரணமாக அதிமுக சொன்னாலும் கூட அரசியல் வட்டாரத்தில் வேறு பல்வேறு விஷயங்களும் பேசப்படுகிறது.

குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரையும் இணைக்க வேண்டும் என்று பாஜக விரும்பியதாகவும் இதற்கு அதிமுக எதிர்ப்பு காட்டியதாகவும் சொல்லப்படுகிறது. அதுபோக பாஜக கேட்ட சீட்களின் எண்ணிக்கை உள்பட பல காரணங்களை அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வரும் 2024 லோக்சபா தேர்தலில் எடப்பாடி தலைமையில் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்திக்கும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதனால், திமுக கூட்டணியில் உள்ள சில கட்சிகளை அதிமுக இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூட பேச்சு எழுந்தது. அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து இதுவரை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கருத்து எதுவும் கூறவில்லை. எடப்பாடியுடன் கூட்டணி முறிந்துள்ளதால் பாஜகவுக்கு வேறு ஆப்ஷன் இல்லை..இனி ஓபிஎஸ் மற்றும் டிடிவியை தங்கள் அணிக்கு பாஜக அழைத்துக்கொள்ளும் என்று பேசப்படும் நிலையில் ஓ பன்னீர் செல்வம் மவுனமாக அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளை தற்போது வரை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
இந்த நிலையில், தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு ஒபிஎஸ் பதிலளிக்காமல் சென்றார். ஓபிஎஸ் அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பற்றி கருத்து எதுவும் தெரிவிக்காமல் சென்றது அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications