'பேரனோடு சேர்ந்து தமிழ் கத்துக்கிறேன்..'சென்னை ஐகோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்ற பரேஷ் ரவிசங்கர் பேச்சு
சென்னை: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்தியாய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு நாடு முழுவதும் 60க்கும் மேற்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தது.
அதனடிப்படையில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாகப் பணி புரிந்து வந்த நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணி மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய நீதிபதி
அதன் அடிப்படையில் அவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்குச் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி டி.எஸ். சிவஞானம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர் நீதிமன்ற பதவி ஏற்றுக்கொண்ட நீதிபதி உபாத்தியாய் அவர்களை அரசு தலைமை வழக்கறிஞர் வரவேற்றார். நீதிபதி உபாத்யாய், 1996ம் ஆண்டு குஜராத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கியவர்.

கொலிஜியம் நீதிபதி
2011ஆம் ஆண்டு குஜராத் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2013ம் ஆண்டு நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றத்தைப் பொருத்தவரை புதிதாக இன்னும் 10 நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். உச்ச நீதிமன்ற கொலிஜியம் அதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. குடியரசுத் தலைவர் ஒப்புதல், அளித்தபின் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள்.

மொத்தம் 56 நீதிபதிகள்
சென்னை உயர்நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை 75. தற்போது நீதிபதி உபாத்யாயுடன் சேர்த்து நீதிபதிகள் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் நீதிபதி பரேஷ் ரவிசங்கர் உபாத்யாய் பேசுகையில், "பாரம்பரியமிக்க உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியற்றது பெருமைக்குரியது. பெரிய பொறுப்பு உள்ளதையும் உணர்கிறேன். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நான் பதவியேற்கும்போது என் மீதான எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்வேன்.

தமிழகத்தின் குடிமகன்
]இன்று தமிழகத்தின் குடிமகனாக ஆகியுள்ளேன். பழமையான கலாசாரத்தை கொண்ட மாநிலத்திற்கு வந்துள்ளேன். நானும், எனது பேரனும் தமிழாசிரியர் ஒருவரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ளப் போகிறோம். பத்து ஆண்டுகளாக நீதிபதியாக இருந்தாலும் இன்றும் மனதளவில் வக்கீலாகத்தான் உள்ளேன். வழக்கறிஞர் ஆஜராகவில்லை என்பதற்காக இதுவரை ஒரு வழக்கைக் கூட தள்ளுபடி செய்ததில்லை. ஆனால் அதை வழக்கறிஞர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications