ராஜேந்திரபாலாஜி என்ன கொலையா பண்ணிட்டார்? திமுக தொண்டர் படையான போலீஸ்..! கொந்தளித்த சி.வி.சண்முகம்
சென்னை: தமிழக காவல்துறையினர் திமுகவின் தொண்டர் படையாக மாறி பொய் வழக்கை போடுகின்றனர் என்றும், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கொலை செய்துவிட்டார் அவரை கைது செய்ய காவல்துறை இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வியெழுப்பியுள்ளார்.
சென்னையில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், இன்பதுரை, தளவாய் சுந்தரம், மனோஜ் பாண்டியன், வழக்கறிஞர் பாபு முருகவேல் ஆகியோர் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.வி.சண்முகம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், இளைஞர்கள் மற்றும் மாணவ சமுதாயத்தினருக்கு போதைபொருட்கள் சர்வசாதாரணமாகக் கிடைக்கின்ற நிலை ஏற்பட்டிருப்பதைப் பற்றியும், இன்று ஆளுகின்ற ஸ்டாலின் தலைமையிலான திமுக, அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்ற, எதிர்த்துப் பேசுகின்றவர்கள் மீது போடப்படுகின்ற பொய்யான வழக்குகள் பற்றியும் ஆளுநரிடம் எடுத்துரைத்தோம் என்றார்.

சி.வி.சண்முக புகார்
தமிழக அரசு செய்யக்கூடிய தவறை சுட்டி காண்பிக்கக்கூடிய நபர்கள் மீது தமிழக காவல்துறை அவர்களை கைது செய்து அவர்களின் தொண்டர் படையாக மாறி பொய் வழக்கை போடுகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், எந்த சட்ட விதிகளையும் பின்பற்றாமல் ஆள் கடத்தலில் காவல்துறை ஈடுபட்டு வருகிறது எனவும், இன்னொரு புறம் தமிழக அரசு கொடுக்கும் மன அழுத்தத்தில், பல காவல்துறை அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என பேசினார்.

காவல்துறை மீது புகார்
தமிழ்நாட்டில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆளுநரிடம் எடுத்துக்கூறி உள்ளோம். காவல்துறையின் நுரையீரல் அழுகி போய் உள்ளது எனவும், அம்மா அரசு யார் மீதும் இது போல வழக்கு தொடுத்தது இல்லை , தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது எனவும் சி.வி.சண்முகம் கூறினார்.

ராஜேந்திரபாலாஜி கொலையா செய்தார்?
மேலும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொலையா செய்தார்? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் சண்முகம், ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய ஏன் இவ்வளவு அவசரம் காண்பிக்கிறது தமிழக அரசு என்றதோடு, ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்ட வழக்கு தற்பொழுது உள்ள செந்தில் பாலாஜி மீதும் உள்ள வழக்கு ஒன்றுதான் எனக் கூறினார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
உங்களால் செந்தில் பாலாஜியை கைது செய்ய முடியுமா ? எங்கள் ஆட்சியில் நாங்கள் கைது செய்தோமா ? சட்டப்படி அவர் மீது வழக்கு தொடுத்து விசாரணை நடத்தினோம் எனவும், ராஜேந்திர பாலாஜி மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் அவரின் உறவினர் மீதோ, அல்லது, குடும்பத்தினர் மீதோ வன்முறை இருக்ககூடாது என்ற சி.வி.சண்முகம் தமிழகத்தில் கஞ்சா போதை குற்றங்கள் அதிகமாகி உள்ளது எனவும், பெண்கள் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறை அதிகமாகி வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications