உள்ளாட்சித் தேர்தலை நேர்மையாக நடத்தக்கோரி.. உயர்நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு
சென்னை : தமிழ்நாட்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜெயக்குமாரின் மனுவுக்கு ஜனவரி 3ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.
தமிழகத்தில் 15 மாநகராட்சிகளில் 1064 வார்டுகளுக்கும், 121 நகராட்சிகளில் 3,468 வார்டுகளுக்கும், 528 பேரூராட்சிகளில் 8,288 வார்டுகளுக்கும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

அதிமுக அமைப்புச் செயலர் ஜெயக்குமார் வழக்கு
அதிமுக அமைப்புச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்தத் தேர்தல் நேர்மையாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடுமாறு தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வாக்கு சாவடிகள், வாக்குப்பெட்டி வைக்கப்படும் அறைகள், வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமரா பொறுத்த வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும் ஆளுங்கட்சிக்கு சாதகமாக பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார்
மேலும் அதிமுக சார்பில் கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆளுநரிடமும் மாநில தேர்தல் ஆணையத்திடமும் ஆளுங்கட்சியின் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ள ஜெயக்குமார் காரணமே இல்லாமல் அதிமுகவினரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

தேர்தலை சிசிடிவி பதிவு செய்ய வேண்டும்
மேலும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும், ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும், தேர்தல் நடவடிக்கைகள் முழுதும் சிசிடிவி பதிவு செய்ய வேண்டும், தேர்தலின்போது மத்திய தொழில் பாதுகாப்பு படை அல்லது ரிசர்வ் படையினரின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஜெயக்குமார் தற்போதைய ஆளுங்கட்சியான திமுக 2006 - 2007 காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் மிகப்பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மாநில தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்
ஜெயக்குமாரின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதிமுக தரப்பில் ஆஜரான விஜய் நாராயண் ஊரக உள்ளாட்சி தேர்தலில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தவுகளை நகர்ப்புற தேர்தலிலும் பின்பற்ற உத்தரவிடவேண்டுமென வாதிட்டார். இதற்கு மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக விளக்கம் தருவதற்கு அவகாசம் வேண்டுமென கோரினார். இதையடுத்து மாநில தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் பெற்று பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications