அவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல.. இதன் பின்னரே பிரச்சனை.. மணிகண்டன் ஜாமின் கோரி ஹைகோர்டில் மனு
சென்னை : திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கட்டாயப்படுத்தி கரு கலைப்பு செய்ததாகவும் திரைப்பட நடிகை அளித்த புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகவும், அந்தரங்கப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும், கட்டாய கருக்கலைப்பு செய்ததாக நடிகை சாந்தினி புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜாமீன்
பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை காவல்துறையினர் ஜூன் 20 ஆம் தேதி கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏமாற்றவில்லை
இதனையடுத்து ஜாமீன் கோரி மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தனக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து குற்றச்சாட்டுகளும் தவறானது உண்மைக்குப் புறம்பானது. திருமணம் செய்து கொள்வதாக எந்த வகையிலும் புகார் அளித்த பெண்ணை ஏமாற்றவில்லை.

ஆதாரங்கள் இல்லை
எனக்கு எதிராக புகார் அளித்தவர் ஒன்றும் தெரியாதவர் அல்ல எனவும் நன்கு படித்து நல்ல வேலையில் உள்ளவர். ஏற்கனவே நான் திருமணமானவன் என்று அவருக்கு தெரியும். இந்த நிலையில் எனக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாருக்கு எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

பிரச்சனை
நான் கடன் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட பொழுது இந்த பிரச்சனை ஏற்பட்டது. மற்றபடி தான் நிரபராதி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும். இதற்காக நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications