பாஜகவுடன் சேர்ந்தால் கட்சியே அழிந்துவிடும்! மோடியை எதிர்க்கும் பொன்னையன்
சென்னை: பாஜகவுடன் கூட்டணி வைக்கும் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் எல்லாம் செல்லாக்காசுகள் என்று சாடி இருக்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன்.
திமுகவுடன் சேர்ந்து பாஜகவை எதிர்க்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

திமுகவை எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே அதிமுக தீய சக்தி என்று அழைத்து வருகிறது. அந்த எதிர்ப்பு ஜெயலலிதா காலத்தில் கீரியும் பாம்புமாக மாறியது. இப்போது அந்த நிலைப்பாடு எல்லாம் தலைகீழாக மாறி உள்ளது.
பாஜக கூட்டணியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேல் தோழனாக இருந்த அதிமுக இப்போது மோடியை எதிர்த்து அரசியல் செய்யத் தொடங்கி இருந்தது. ஒரு பக்கம் மோடி எதிர்ப்பு இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு என இரட்டை எதிர்ப்பு அரசியலைச் செய்து வந்த திமுக, மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க அதிமுகவை அரவணைக்கப் பார்க்கிறது.

இதனால், தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளைத் தாண்டி ஒரு தேசியக் கட்சி புதியதாக உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்று திரைமறைவில் திட்டம் தீட்டப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.
இந்நிலையில் மோடியுடன் கூட்டணி வைத்தால் அந்தக் கட்சிகள் காலப்போக்கில் அழிந்தே போய்விடும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன் பேசி இருக்கிறார். இவர் பாஜகவுடன் அதிமுக கூட்டணியிலிருந்த போதே வெளிப்படையாக எதிர்த்து வந்தவர்.

இப்போது இன்னும் வேகமாக பாஜகவைச் சாடி வருகிறார். இப்போது பொதுவெளியில் பாஜகவைப் பற்றிப் பல விசயங்களைப் போட்டு உடைத்துள்ளார் பொன்னையன்.
"மோடி எதிர்ப்பில் அளவுகடந்த முன்னால் நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. இன்னும் சொல்லப்போனால், மற்ற எல்லா முதலமைச்சர்களை விட அதிகமாக முன்னால் இருக்கிறார். பாஜக இனிமேல் அன்பாக அழைத்தாலும் சரி, அல்லது மிரட்டி அழைத்தாலும் சரி, இரண்டிற்கு நாங்கள் நாங்கள் செவிமடுக்க மாட்டோம்.

பாஜகவின் அன்பு என்பதே போலியானது. 5 வடமாநிலங்களை நட்புடன் கூட்டணி வைத்திருந்தார்கள். அவர்களை வைத்து கூட்டாட்சிக்கு வந்தார்கள். பிறகு அந்த நட்புக் கூட்டாளிகளை எல்லாம் முதுகிலே குத்தினார்கள். வாயில் விசத்தை ஊற்றினார்கள். அவர்களையே பிறகு அழித்தார்கள். பின்னால் அந்த 5 மாநிலங்களிலும் பாஜகவினரே ஆட்சியைப் பிடித்தார்கள்.

இப்படி நயவஞ்சகக் கொள்கைக்குச் சொந்தக்காரர்கள்தான் ஆர்.எஸ்.எஸ். வென்று எடுத்த பாஜக என்பது.
உலகத்தில் தமிழ் இனமே இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் கொள்கை. திராவிடம் என்பது உலக அளவில் அழிந்துவிட வேண்டும், இதுதான் ஆர்.எஸ்.எஸ் கொள்கை. இதுவேதான் மோடியின் கொள்கை. ஆகவே, அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இனி எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை. அது நூற்றுக்கு நூறு சதவீதம் அல்ல; நூற்றுக்கு ஒரு கோடி சதவீதம் உண்மை.

தமிழ்நாட்டு மக்கள் இதயத்தில் பாஜகவுக்கு இடமில்லை. மீண்டும் மோடியே பிரதமராக வருவார் என்ற நம்பிக்கையில் பாஜகவுடன் சில கூட்டணி வைக்கத் துடிக்கிறார்கள். அப்படி கூட்டணி வைப்பவர்கள் காலப் போக்கில் அழிந்துவிடுவார்கள். எனது கணிப்பின்படி பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு சீட்டுக்கூட வராது.

அண்ணாமலை தன்னை வளர்த்துக் கொள்வதற்காக ஏதேதோ உளறிக்கொண்டிருக்கிறார். அவரை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதை அண்ணாமலை காலப்போக்கில் உணர்ந்து விடுவார்" என்கிறார்

டிடிவி தினகரன், சசிகலா, ஒபிஎஸ் போன்றவர்கள் எல்லாம் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி வைக்க உள்ளார்கள் எனப் பேச்சு அடிப்படுகின்றது. அது பற்றிப் பேசிய பொன்னையன், "டிடிவி தினகரன், சசிகலா,ஒபிஎஸ் போன்றவர்கள் செல்லாக் காசுகள். அது ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் 5 ஆயிரம் ரூபாயாக இருந்தாலும் செல்லாக்காசு என்றால் அதற்கு மதிப்பு இருக்காது. அப்படித்தான் இவர்கள். இந்தச் செல்லாக்காசுகளை வைத்து பாஜகவினால் தமிழ்நாட்டில் ஒன்றுமே செய்ய முடியாது" என்கிறார்












Click it and Unblock the Notifications