Sengottaiyan: அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கம்! எடப்பாடி பழனிசாமி அதிரடி
சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சேலத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில் எடப்பாடி பழனிசாமி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து தலைமை கழக அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகத்தில் இருப்பவர்கள், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்பது தெரிந்திருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து, கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிற காரணத்தாலும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டத்சை சேர்ந்த கே.ஏ.செங்கோட்டையன் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். இந்த நிலையில் நேற்று பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
அத்துடன் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார்.
கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்தாராம்.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மூவரும் துரோகிகள் என்றும் பேசி வைத்துக் கொண்டு ஒன்றாக தேவர் ஜெயந்திக்கு வந்துள்ளார்கள் என்றும் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்க எந்த தயக்கமும் இல்லை என கூறியிருந்தார். கட்சிக்கு எதிராக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.
இந்த நிலையில் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடனும் கட்சி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வந்தார். செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து ஆலோசனையாக இருக்குமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஆலோசனை முடிந்ததும் செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார்.
செங்கோட்டையன் தற்போது கோபிச்செட்டிபாளையம் எம்எல்ஏவாக உள்ளார். தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதால் வரும் தேர்தலில் அவர் அதிமுக சார்பாக போட்டியிட முடியாது. எனவே செங்கோட்டையன் தனித்து சுயேச்சையாக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன் 1977 ஆம் ஆண்டு சத்தியமங்கலத்தில் போட்டியிட்டு முதல்முறையாக எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது. செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதால் அவரது ஆதரவாளர்களான சத்யபாமா உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications