5 பேரைக் காப்பாற்றவே பாஜகவோடு கூட்டணி.. எடப்பாடிக்கு நேரம் பார்த்து அன்வர் ராஜா கொடுத்த குடைச்சல்!
சென்னை: யாரோ 5 அல்லது 10 பேரைக் காப்பாற்றுவதற்காக பாஜகவுடனான கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சம்மதித்துள்ளார் என்று முன்னாள் எம்பி அன்வர் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவுக்கு அடிமை சாசனத்தை அதிமுக எழுதிக் கொடுத்துவிட்டது என்று கூறிய அன்வர் ராஜா, அதிமுக தொண்டர்கள் மத்தியில் பாஜக உடனான கூட்டணி உற்சாகத்தைக் கொடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தென் மாவட்டங்களில் தனது மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் ராமநாதபுரம் முன்னாள் எம்பி அன்வர் ராஜா சில நாட்களுக்கு முன்பாக திமுகவில் இணைந்து கொண்டார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், அதிமுகவுக்கு இஸ்லாமியர்களின் ஆதரவு இல்லை என்று பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் ராமநாதபுரம் போன்ற இஸ்லாமியர்கள் அதிகளவில் வசிக்கும் தொகுதிகளில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்களின் அரணாக பாஜகவை உடன் வைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசும் போது, அது எடுபடுமா என்ற விவாதமும் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். ஓபிஎஸ் தரப்பையும் சேர்க்க எடப்பாடி பழனிசாமி மறுக்கும் நிலையில், அதிமுகவுக்கு மிகப்பெரிய சோதனை இருந்து வருவதாகப் பார்க்கப்படுகிறது. இதனை எடப்பாடி பழனிசாமி எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற கேள்வியும் உள்ளது.
இந்த நிலையில் திமுகவில் இணைந்த அன்வர் ராஜா மிகப்பெரிய குற்றச்சாட்டு ஒன்றை எடப்பாடி பழனிசாமி மீது முன் வைத்துள்ளார். இதுதொடர்பாக அன்வர் ராஜா பேசுகையில், அதிமுக - பாஜக கூட்டணியில், அதிமுக தீர்மானிக்கும் இடத்தில் கூட இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிமுக அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தான் இந்த கூட்டணியையே வைத்திருக்கிறார்கள்.
யாரையோ 5 பேர், 10 பேரைக் காப்பாற்றுவதற்காகவே இந்த கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. கட்சியைக் காப்பாற்றுவதற்காக இப்படியொரு கூட்டணியை வைப்பார்களா? 2024ல் பாஜகவுடன் இனி கூட்டணி வைக்க மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தாரா? இல்லையா? அன்றைய நாளில் அதிமுக தொண்டர்கள் தீபாவளி போல் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.
ஆனால் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி என்று அதிமுக அறிவித்த போது, அது கேத வீட்டைப் போல் இருந்தது. எங்கேயாவது மகிழ்ச்சி இருந்ததா? தொண்டர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. மேலே இருப்பவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், அதனை தொண்டர்கள் ஏற்கவில்லை. அதனால் அதிமுக - பாஜக கூட்டணி களத்தில் இணைந்து செயல்படுவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications