அதிமுகவில் இணையும் நாதக முன்னாள் நிர்வாகி காளியம்மாள்? தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிரடி முடிவு!
சென்னை: நாம் தமிழர் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த காளியம்மாள் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அக்கட்சியில் இருந்து விலகினார். இந்நிலையில் காளியம்மாள் இன்று அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாம் தமிழர் கட்சியில் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வந்த காளியம்மன் கடந்த ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினார். இவரின் மேடைப் பேச்சிற்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு. எம்.பி, எம்.எல்.ஏ தேர்தல்களில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளைப் பெற்றவர்.

சீமான் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து விலகினார் காளியம்மாள். மேடையிலேயே காளியம்மாளை விமர்சிப்பது, அவர் பேச்சுக்கு பதிலடி கொடுப்பது என சீமான் - காளியம்மாள் இடையேயான பனிப்போர் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கிய நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நாம் தமிழர் கட்சியில் இருந்து காளியம்மாள் விலகினார்.
"காலத்தின் சூழல், உயிராக எண்ணி வழி நடந்த நாம் தமிழர் கட்சியில் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது" என்று தனது அறிக்கையில் அப்போது தெரிவித்திருந்தார் காளியம்மாள். கட்சியிலிருந்து விலகிய பின்னரும் தனது பகுதி மக்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தார்.
காளியம்மாள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என்ற பேச்சும் எழுந்தது. ஆனால் அதனை மறுத்து இருந்தார் காளியம்மாள். ஒரு செய்தியாளர் சந்திப்பில், "எந்த கட்சியிலிருந்து என்னை அழைத்தாலும், அந்த கட்சியின் நோக்கம் சரியாக இருந்தால் அங்கு இணைவேன்" என்று தெரிவித்து இருந்தார். மேலும், இந்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் என்று காளியம்மாள் ஏற்கனவே கூறி இருந்தார்.
காளியம்மாள், நாகை மாவட்டத்தில் ஏராளமான பெண்களை ஒன்றிணைத்து கூட்டங்களை நடத்தி பேசி வந்தார். இதனால், அவர் தனிக்கட்சி தொடங்கப் போகிறாரா என்றும் கேள்வி எழுந்தது. இந்நிலையில், காளியம்மாள் அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைவார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications