தவெகவில் இணையும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சந்திரன்.. யார் இவர்?
சென்னை: புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் ஐ.ஜி சந்திரன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். பணி ஓய்வுக்குப் பிறகு பாஜகவில் செயல்பட்டு வந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு அக்கட்சியில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில், தற்போது தவெக-வில் தனது புதிய அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள சூழலில், மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த பலர் தவெகவில் இணைந்து வருகின்றனர். அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், திமுக, அதிமுக கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று தவெகவில் இணைகின்றனர்.

புதுச்சேரியில் அண்மையில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, புதுச்சேரியில் தவெக ஆட்சி அமையும் எனப் பேசி இருந்தார் விஜய். இந்நிலையில், புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பலர் தவெகவில் நைந்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் ஐஜி ராமச்சந்திரன் தவெகவில் இணைகிறார்.
ஐபிஎஸ் அதிகாரி சந்திரன் 34 ஆண்டுகளாக புதுச்சேரியில் எஸ்.பியாகவும், டி.ஐ.ஜி மற்றும் ஐ.ஜியாகவும் பணியாற்றியுள்ளார். பல்வேறு மாநிலஙகளிலும், யூனியன் பிரதேசங்களிலும் காவல் துறையில் உயரதிகாரியாக பணியாற்றியவர். மேலும் தலைமை தேர்தல் ஆணையத்தின் தேர்தல் பார்வையாளராகவும் பல மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்.
புதுச்சேரி காவல் துறையில் ஐ.ஜியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சந்திரன் கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பாக 2024 மார்ச் மாதம் பாஜகவில் இணைந்திருந்தார். பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் செல்வகணபதி எம்.பி மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டிருந்தார்.
"ஆழ் மன எண்ணங்களும், பிரபஞ்சமும்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் முன்னாள் ஐஜி சந்திரன். தனது பணிக் காலத்தில் சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கஞ்சா தடுப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார்.
தவெக கட்சியில் இணைவது தொடர்பாக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சந்திரன் பேசுகையில், "நான் புதுச்சேரியில் ஐ.ஜியாக பணியாற்றி கடந்த 2023 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றேன். அதன்பிறகு 2024ல் பாஜகவில் இணைந்தேன். அங்கு எனக்கு திருப்தி இல்லை. அதற்கான காரணத்தை பின்னர் சொல்கிறேன். பாஜகவில் இருந்து விலகி 3 மாதங்கள் ஆகிவிட்டது.
தவெக நிர்வாகிகளோடு பேசினேன். எங்களுக்கு கட்சியின் கொள்கையும், நோக்கமும் திருப்தியாக உள்ளது. இதையடுத்து தவெகவில் இணைய முடிவெடுத்துள்ளேன். விஜய் முன்னிலையில் தவெகவில் இணைகிறோம். இளைஞர்கள் எழுச்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் மாற்றம் வரும், புதுச்சேரியிலும் தவெக முக்கியமான இடத்தைப் பெறும்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications