நகரங்களில் 100 நாள் வேலை திட்டம்?ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜனுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்திய ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.
தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்பட்ட மாநில பொருளாதாரத்தை மீட்க ரங்கராஜன் தலைமையில் ஒரு குழுவை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருந்தார். இந்த குழு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமது அறிக்கையை தமிழக அரசிடம் தாக்கல் செய்தது.

ரங்கராஜன் குழு தமது அறிக்கையில், மருத்துவ வசதிகளுக்காக ரூ5,000 கோடி செலவிட வேண்டும்; மருத்துவ துறைக்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. செங்கல்பட்டு அருகே மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் பூங்கா ஒன்றை உருவாக்கவும் ரங்கராஜன் குழு பரிந்துரைத்திருந்தது.
மேலும் துறைமுக வசதி கொண்ட கடற்கரை பகுதிகளில் மருந்துகள் தயாரிப்புக்கான தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்; சென்னை, கோவை அருகே பயோடெக் நிறுவனங்களுக்கான சிறப்பு தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும்; நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை திட்டம் உருவாக்க வேண்டும் என்றும் ரங்கராஜன் குழு பரிந்துரைத்தது.
இந்த நிலையில் சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை ரங்கராஜன் நேரில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ரங்கராஜன் குழு ஏற்கனவே தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரைகள், நகரங்களில் 100 வேலை திட்டத்தை எப்படி செயல்படுத்துவது ஆகியவை தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்திருக்கக் கூடும் என்கின்றன தலைமை செயலக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications