மறைந்தார் ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ச. வெங்கிடரமணன்.. பொருளாதாரத்தை செதுக்கிய தமிழன்!
சென்னை: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ச.வெங்கிடரமணன் (92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்த போது, அந்த நெருக்கடியிலிருந்து மீட்க இவர் ஆற்றிய பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது என பொருளாதார அறிஞர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இந்தியாவுக்கு 1990 என்பது நெருக்கடியான காலகட்டம். அதுவரை நாடு பின்பற்றி வந்த பொருளாதார கொள்கைகள் வேறு. ஆனால் 1990ல் சர்வதேச அளவில் சோவியத் ரஷ்யா வீழ்ச்சி, அமெரிக்காவின் அசுர வளர்ச்சி, சீனாவின் முன்னேற்றம் என எல்லாமும் நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. சோவியத் ரஷ்யாவை பார்த்து வியந்து போன நேரு, அந்நாட்டின் பொருளாதார கொள்கையையே தாமும் பின்பற்றினார். அப்படிதான் 5 ஆண்டு திட்டங்கள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டன.

அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டு பலப்படுத்தப்பட்டதும் நேரு காலகத்தில்தான். அதன் பின்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசுகள் பொதுத்துறை நிறுவுனங்களை பெரிதும் நம்பியது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சிக்கு கை கொடுக்கவில்லை. விளைவு அந்நிய செலாவணி மெல்ல மெல்ல குறைந்து 1980களின் இறுதியிலும், 1990களின் தொடக்கத்திலும் நாடு மிக மோசமான வீழ்ச்சியை எட்டியது.
இந்தியா அடிப்படையில் அதிக அளவு இறக்குமதியை சார்ந்து இருக்கும் நாடு. தங்கம், கச்சா எண்ணெய்தான் மிக அதிகமாக இறக்குமதி செய்கிறோம். அப்படி இருக்கையில் இதற்கான பணத்தை டாலரில்தான் கொடுக்க வேண்டும். அதற்கு நம்மிடம் போதுமான அளவு டாலர் கையிருப்பு இருக்க வேண்டும். இந்த டாலரைதான் அந்நிய செலாவணி என்று கூறுவார்கள். மேலே குறிப்பிட்டதை போல 1980களின் இறுதியிலும், 1990களின் தொடக்கத்திலும் அந்நிய செலாவணியின் கையிருப்பு மிக மோசமான அளவில் குறைந்திருந்தது. இதை வைத்து ஓரிரு நாட்களுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும் நிலை இருந்தது. அப்போதுதான் வெங்கிடரமணன் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பொறுப்பேற்கிறார்.
ஒருபுறம் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் புதிய தாராளமய மற்றும் நவீனமய கொள்கையை அமல்படுத்துகிறார். அதுவரை பொதுத்துறையை நம்பியிருந்த காங்கிரஸ் அரசு அதன்பிறகு தனியார் முதலீடுகளை ஈர்க்க ரெடியாகியது. தனியார் முதலீடுகள் எதிர்பார்த்தபடி வர தொடங்கின. நாட்டிற்கு வருவாய் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. அந்த நேரத்தில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் மொத்தமாக நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிவிடும் என்ற நிலை 1990களில் இருந்தது.
இப்படியான நெருக்கடியை சரியாக சமாளித்து பொருளாதாரத்தை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றதில் முக்கிய பங்கு வெங்கிடரமணனுக்கு இருக்கிறது. இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராவதற்கு முன்னர் 1985 முதல் 1989 வரை நிதியமைச்சகத்தின் நிதிச் செயலாளராக சிறப்பாக இவர் செயல்பட்டிருக்கிறார். ஆனால் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அவர் பணியாற்றியதற்காகதான் தற்போது வரை பெருமையுடன் நினைவுக்கூரப்படுகிறார்.
தாராளமயமாக்கல் கொள்கைகள் காரணமாக வெளிநாட்டிலிருந்து மூலதனம் குவிந்த போது, இதனை பயன்படுத்தி போட்டி சூழலை வளர்த்து அதன் மூலம் அரசு கஜானாவுக்கு நிதியை கொண்டு வரவேண்டும். எனவே வெங்கிடரமணன், வங்கி அமைப்பை வலுப்படுத்தி அதன் செயல்திறனை அதிகரிக்க முயன்றார். அதேபோல நிதி ஒழுங்குமுறை கட்டமைப்பை மேம்படுத்துவதிலும், நிதி நிறுவனங்களுக்குள் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதிலும் கவனம் செலுத்தினார்.
இது நிலையான பொருளாதாரச் சூழலை தக்க வைத்துக்கொள்ள உதவியாக இருந்தது. இந்த அற்புதமான பணியை வெங்கிடரமணன் சிறப்பாக செய்து முடித்தார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து, கேரளா மற்றும் அமெரிக்காவில் கல்வி பயின்று ஐஏஎஸ் அதிகாரியாக உருவெடுத்து, நாட்டின் நெருக்கடி காலத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக பணியாற்றிய வெங்கிடரமணன் இன்று உடல்நலக்குறைவால் மறைந்தார். அவரது சேவை என்றும் மறக்க முடியாதது என்று பல்வேறு பொருளாதார அறிஞர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications